![](https://globaltamilnews.net/wp-content/uploads/2021/06/macron-2.jpg)
பிரான்ஸின் அதிபர் எமானுவல் மக்ரோனின் முகத்தில் அறைந்த இளைஞருக்கு, 14 மாதங்கள் ஒத்திவைக்கப்பட்ட 18 மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.அதன் படி நான்கு மாதங்கள் அவர் முழுமையாகச் சிறையில் அடைக்கப்படுவார். ஏஞ்சிய 14 மாதங்கள் கட்டாய உளவியல் சிகிச்சை மற்றும் கண்காணிப்புகளுடன் பராமரிக்கப்படுவார்.
ஆனால் அபராதத் தொகை எதுவும் விதிக்கப்படவில்லை. அத்துடன் இரண்டு ஆண்டுகள் கட்டாய வேலை மற்றும் தொழில் பயிற்சிகளில்ஈடுபடவேண்டும். அவர் ஆயுதங்களை வைத்திருப்பதற்கு ஐந்து ஆண்டுகள்தடை விதிக்கப்படுகிறது.
அத்துடன் மூன்று ஆண்டுகளுக்கு அவரது சிவில்உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. தாமியன் தாரெல் (Damien Tarel) என்ற 28 வயதுடைய அந்த இளைஞர் கடந்த செவ்வாயன்று அதிபர் மக்ரோனை முகத்தில் அறைந்து தாக்கியமைக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார்.
சம்பவம் நடந்து 48 மணி நேரங்களில் விரைவாக ஆஜர் செய்கின்ற நடைமுறைகளின் கீழ் அவர் இன்று Valencia நகரில்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டார்.அங்கு அவர் தனது குற்றத்தை ஏற்றுக் கொண்டார்.
ஆனால் தன்னைப் போன்று அநீதியை உணர்கின்ற பிரெஞ்சு மக்களினதும் மஞ்சள் மேலங்கியினரதும் சார்பில் தனது செயலுக்கு விளக்கம் அளிப்பது போன்று அவரது பதில்கள் அமைந்தன.
“அரசியல் விடயங்களில் அதிபருக்குச் சவால் விடும் விதமாக ஏதாவது செய்வதற்கு ஆலோசித்தோம். மக்ரோனுக்கு எதிராக முட்டையை அல்லது கிறீமை வீசுவது என்றே முதலில் தீர்மானித்திருந்தோம். ஆனால் அவரை முகத்தில் அறைந்த செயல் திட்டமிட்டுச் செய்தது அல்ல. அவர் என்னை நோக்கி மிக நெருக்கமாக வருவது எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.
“என்னைத் தனது வாக்காளராக்குவதற்கு விரும்பும் அவரது அனுதாபத்தையும் பொய்யான பார்வையையும் கண்டபோது எனக்குள் வெறுப்பு ஏற்பட்டது.” உள்ளுணர்வின் படி செயற்பட்டேன். இந்தச் செயல் வருந்தத்தக்கது. ஆனால் நான் என்ன செய்கிறேன் என்பதை எந்தவகையிலும் கருத்தில் கொள்ளவில்லை.
எங்கள் ஜனநாயகத்தை சோதனைக்குஉட்படுத்த நான் விரும்பவில்லை. ஆனால் அவர்(மக்ரோன்) முழு பிரெஞ்சு மக்களாலும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்லர் என நான் எண்ணுகிறேன்.எங்கள் நாட்டின் வீழ்ச்சியையே அவர்பிரதிபலிக்கிறார்.
“மக்களும் மஞ்சள் மேலங்கியினரும் குரல் எழுப்புகிறார்கள். ஆனால் அவர்களது குரல்கள் செவிமடுக்கப்படவில்லை என நம்புகிறேன். மஞ்சள் மேலங்கி அரசியல் இயக்கத்தின்( yellow vests) ஒரு பகுதியாகவே நானும் இருக்கின்றேன்.” -இவ்வாறு நீதிமன்றத்தில் கேள்விக ளுக்கு பதிலளிக்கையில் தாமியன் தெரிவித்திருக்கிறார்.
மக்ரோனின் முகத்தில் அறைவதைப் படமாக்கிக்கொண்டு நின்ற தாமியனின் நண்பனும் கைது செய்யப்பட்டார். அவரது இல்லத்தில்காவல்துறையினர் நடத்தியசோதனையின்போது அனுமதி இன்றிவைத்திருந்த பழைய ஆயுதங்கள் சிலவும் ஹிட்லரின் “மெயின் காம்ப் (“Hitler’s “Mein Kampf”) என்ற நூலின் பிரதிகளும் மீட்கப்பட்டிருந்தன. அவருக்கு எதிரான நீதி விசாரணைகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன.
(படம் :தீர்ப்பை எதிர்பார்த்து நீதிமன்றில்காத்திருந்த ஊடகவியலாளர்கள், படப்பிடிப்பாளர்கள்-நன்றி : Radio France)
—————————————————————–
குமாரதாஸன். பாரிஸ்.11-06-2021