Home இந்தியாதிருச்சி சிறப்பு முகாமில், 16 தமிழர்கள் தற்கொலைக்கு முயற்சி!

திருச்சி சிறப்பு முகாமில், 16 தமிழர்கள் தற்கொலைக்கு முயற்சி!

by admin


குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படும் வெளிநாட்டவரை தங்க வைப்பதற்காக திருச்சி மத்திய சிறை வளாகத்தில் சிறப்பு முகாம் உள்ளது. இங்கு இலங்கை தமிழர்கள் 78 பேர் உட்பட வங்கதேசம், நைஜீரியா, சூடான், பல்கேரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 116 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் தண்டனை காலம் முடிந்தவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி, கடந்த சில ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதன் தொடர்ச்சியாக கடந்த ஜூலை 15 ஆம் திகதியன்று இலங்கை தமிழர்கள் 10 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி கடந்த 11ஆம் திகதி முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். 8 ஆவது நாளான நேற்று 2 பேரின் உடல்நிலை மோசமானதால் வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது, இலங்கை தமிழர்கள் சிலர் திடீரென தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றனர்.

உமா ரமணன் என்பவர் வயிற்றிலும், அமல்ராஜ் என்பவர் கழுத்திலும் கத்தியால் கிழித்துக் கொண்டனர். சிலர் மரங்களின் மீது ஏறிக்கொண்டு, கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப் போவதாகக் கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் உடனடியாக அம்புலன்ஸ்களை வரவழைத்து, கத்தியால் கிழித்துக் கொண்டதில் காயமடைந்த உமா ரமணன், அமல்ராஜ் மற்றும் தூக்க மாத்திரைகளை சாப்பிட்ட ரீகன், நிஷாந்த், நிமலன், ஸ்டீபன் உள்ளிட்ட 14 பேரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மாவட்ட வருவாய் அலுவலர் பழனிகுமார், மாநகர சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் சக்திவேல், முகாம்களுக்கான தனித்துணை ஆட்சியர் ஜமுனா ராணி உள்ளிட்டோர் உடனடியாக முகாமுக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன் பின்பு ஆட்சியர் சிவராசு கூறியதாவது:

முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த 10 மீனவர்கள் ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்டனர். பாஸ்போர்ட் வழக்குகளில் தொடர்புடைய 21 பேரை விடுதலை செய்வதற்கான பரிந்துரை, தற்போது அரசின் பரிசீலனையில் உள்ளது.

இந்த விவகாரம் குறித்து அரசுக்கு ‘அவசர அறிக்கை’ அனுப்பப்படும். தற்கொலைக்கு முயன்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என்றார்.

இதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய சிறை வளாகத்தில் அதிகளவிலான காவல்துறையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More