Home இலங்கை வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர் அவமதிக்கப்பட்டார்!

வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் செய்தியாளர் அவமதிக்கப்பட்டார்!

by admin

வட்டுக்கோட்டையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க காவல் நிலையத்துக்குச் சென்ற செய்தியாளரை, தகாத வார்த்தைகளினால் ஏசி அவரின் கடமைக்கு தமிழ் காவற்துறை உத்தியோகத்தர்கள் இடையூறு விளைவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19.09.21) வட்டுக்கோட்டை காவல் நிலையம் முன்பாக இடம்பெற்றது.

வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோயில் பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் இரவு மோதல் இடம்பெற்றது. அது தொடர்பில் செய்தி சேகரிப்புக்காக காவல் நிலையம் சென்ற போதே காவற்துறையினர் அவ்வாறு நடந்து கொண்டுள்ளனர்.

அது குறித்து தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் வட்டுத் தெற்கைச் சேர்ந்த ரஜீவன் என்ற பொதுமகனான இளைஞன் எப்போதும் தங்கியிருப்பார்.

அவர் தமிழ் காவற்துறை உத்தியோகத்தர்களுடன் தொடர்பைப் பேணி வருவது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் மற்றும் பொலிஸ் பேச்சாளரிடம் யாழில் இருந்து இயங்கும் இணைய ஊடகம் கடந்த வாரம் கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் இன்று இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் ரஜீவன் என்ற இளைஞனின் வழிநடத்தலில் வட்டுக்கோட்டை காவற்துறையினர் நடந்துகொள்வதாக குறித்த இணைய ஊடகம் அறிந்து , அதனடிப்படையில் காவல் நிலையத்துக்கு அவ்வூடகத்தின் செய்தியாளர் சென்றிருந்தார்.

அங்கு சென்ற செய்தியாளரை அனுமதிக்க மறுத்த உப காவற்துறை பரிசோதகர் அலோசியஸ் மற்றும் காவற்துறை கொஸ்தாபல் மயூரன் இருவரும் தகாத வார்த்தைகளினால் கேள்வி எழுப்பியதுடன் காவற்துறை நிலையத்துக்குள் வந்து பாருங்கள் என மிரட்டல் விடுத்தனர்.

அவர்கள் இருவரும் மதுபோதையில் இருந்ததை அவதானித்த செய்தியாளர், காவற்துறை ஊடகப் பேச்சாளருக்கு தொடர்பை ஏற்படுத்தி தகவலைத் தெரிவித்தார்.

இந்த அநாகரிக சம்பவம் தொடர்பில் விசாரிக்க 10 நிமிடங்கள் தமக்கு வழங்குமாறு காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

எனினும் அவர் பின்னர் பதிலளிக்கவில்லை. முற்றுமுழுதாக ஒரு தரப்பினருக்கு ஆதாரவாக வட்டுக்கோட்டை காவற்துறையினர் செயற்படுவது செய்தியாளர் அறிந்திருந்த நிலையில் காவற்துறை நிலையத்திலிருந்து வெளியேறியிருந்தார்.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் காவற்துறை மா அதிபர் விடுப்பில் சென்றுள்ள நிலையில் வட்டுக்கோட்டை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியும் விடுப்பில் செல்வுள்ள நிலையில் தமிழ் காவற்துறை உத்தியோகத்தர்கள் இந்த ஊடக அடக்குமுறையை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வட்டுக்கோட்டையில் மோதல் – ஒருவர் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டார்!

யாழ்.வட்டுக்கோட்டை – முதலியார் கோவில் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் இரு குழுக்களுக்கிடையிலான தாக்குதல் சம்பவத்திற்கு இலக்கான குடும்பஸ்த்தர் ஒருவர் காயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இரவு 7 மணியளவில் முதலியார் கோவில் பகுதிக்கு வந்த குழு ஒன்று அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன் வீட்டிலிருந்த குடும்பஸ்தர் மீதும் தாக்குதல் நடத்திவிட்டு கதவு, ஜன்னல், வேலி மற்றும் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றுள்ளது.

இதனையடுத்து தாக்குதலுக்கு இலக்கான குடும்பஸ்த்தர் 1990 நோயாளர் காவு வண்டி ஊடாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் அறிந்து அங்கு சென்ற காவற்துறையினர் மற்றும் இராணுவத்தினர் சந்தேகநபர்கள் இருவரை கைது செய்துள்ளதுடன் 7 மோட்டார் சைக்கிள்களையும் கைப்பற்றியிருப்பதாக கூறப்படுகின்றது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More