Home இந்தியா இலங்கையில் பறிக்கப்பட்ட படகாளர்களுக்கு நிவாரணம்!

இலங்கையில் பறிக்கப்பட்ட படகாளர்களுக்கு நிவாரணம்!

by admin

இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் 20.01.2022 அன்று தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மீனவ சங்கப் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தார். மீனவர்களது அனைத்துக் கோரிக்கைகளின் மீதும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த முதல்வர், மீனவர்களது கோரிக்கைகள் தொடர்பான கீழ்க்காணும் அறிவிப்புகளை வெளியிட்டார்:

  1. இலங்கை அரசினால் பறிமுதல் செய்யப்பட்டு தற்பொழுது இலங்கையில் பயன்படுத்த இயலாத நிலையிலுள்ள தமிழகத்தைச் சார்ந்த 125 படகுகளின் உரிமையாளர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தினை காத்திடும் பொருட்டு, 108 விசைப்படகு உரிமையாளர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் வீதமும், 17 நாட்டுப்படகு உரிமையாளர்களுக்கு தலா ரூ.1.50 இலட்சம் வீதமும், மொத்தம் ரூ.5.66 கோடி வழங்கப்படும்.
  2. கடந்த வடகிழக்கு பருவமழைக்காலத்தில் சேதமடைந்த 105 மீன்பிடி படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடாக ரூ.5.66 கோடி வழங்கப்படும்.
  3. இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களின் விடுதலை குறித்து மீனவர் சங்கப் பிரதிநிதிகள் முதல்வரிடம் வலியுறுத்தினார்கள். கைது செய்யப்பட்ட மீனவர்களில் மீதமுள்ள மீனவர்களை விடுதலை செய்ய கடிதம் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும் இந்த அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளையும், எம்.பி.க்கள் மூலம் வலியுறுத்தியதையும் மீனவ சங்க பிரதிநிதிகளுக்கு முதல்வர் விளக்கி கூறினார்.

மேலும் இது தொடர்பாக நாடாளுமன்றக் குழு துணை தலைவர் கனிமொழி எம்.பியை, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் நேரம் பெற்று – தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சருடன், மீனவ பிரதிநிதிகளையும் அழைத்துச் சென்று தமிழ்நாட்டு மீனவர்கள் விடுதலையை விரைவுபடுத்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும்படி முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்.

இந்நிகழ்வில் மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா. ஆர். இராதாகிருஷ்ணன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு மீன்வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் ந.கௌதமன், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர், காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், தெ.சு.ஜவஹர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் கே.சு.பழனிசாமி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(தினமணி)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More