Home உலகம் பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!! வெளியேறும் மக்களால் பெரும் வாகன நெரிசல்!

பெலாரஸ் வழியாக ரஷ்யப் படைகள் உக்ரைன் தலைநகர் நோக்கி நகர்வு!! வெளியேறும் மக்களால் பெரும் வாகன நெரிசல்!

by admin

!உக்ரைனின் முக்கிய இராணுவ இலக்குகளை மட்டும் நவீன ஏவுகணைகளால் தாக்கி அழித்தபடி ரஷ்யப் படைகள் மிகவேகமாக நாட்டின் தெற்கு நோக்கி முன்னேறி வருகின்றன. தாக்குதல் ஆரம்பித்து 24 மணிநேரத்துக்குள் ரஷ்யப் படைகள் உக்ரைனின் தலைநகர் கீவ் அமைந்துள்ள பிராந்தியத்தின் எல்லைப்பகுதியை அண்மித்துவிட்டன என்று செய்தி வெளியாகியிருக்கிறது.

பெலாரஸ் நாட்டில் இருந்து நுழைந்த ரஷ்யப் படை அணி ஒன்று கிராட் ஏவுகணைத் (Grad missiles) தாக்குதல்களைநடத்தியவாறு முன்னேறி கீவ் பிராந்தியத்தின் விளிம்பில் உள்ள ஹொஸ்டோமெல் விமானத் தளத்தை (Hostomel Airport) நெருங்கியுள்ளது.

அந்தப்பகுதியில் கடும்சண்டை மூண்டுள்ளதாகவும் அடையாளம் தெரியாத ஹெலிக்கொப்ரர்கள் சில வான்பரப்பில் தென்படுவதாகவும் ஏஎப்பி செய்தி ஒன்று தெரிவிக்கிறது. ஹொஸ்டோமெல் விமான நிலையம்(Hostomel Airport) உலகின் மிகப் பெரியவர்த்தக வான் தளம் ஆகும். அதேசமயம் உலகின் மிகப் பெரிய’மிரியா’ (Mriya) எனப்படும் சரக்கு விமானத்தின் இறங்குதளமாகவும் உக்ரைன் இராணுவத்தின் பிரதான வான் தளமாகவும் விளங்குகின்றது என்பது கவனிக்கத்தக்கது.

அந்தத்தளம் ரஷ்யப் படைகள் வசம் வீழ்ந்தால்அது உக்ரைனுக்குப் பெரும் இராணுவப் பின்னடைவாகவும் கீவ் நகருக்கு அச்சுறுத்தலாகவும் மாறும். இதேவேளை, இதுவரையான தாக்குதல்களில் ஜம்பதுக்கு மேற்பட்ட சிவிலியன்கள் உயிரிழந்துள்ளனர் என்று உக்ரைன்அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யக் ஹெலிக்கொப்ர்ர் ஒன்றின் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் ஆறு விமானங்களைச் சுட்டு வீழ்த்தியிருப்பதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்று காலை முதல் உக்ரைன் தலைநகர் கீவில் இருந்து பெரும் மக்கள் இடம்பெயர்வு ஆரம்பித்துள்ளது. வெளியேறிச் செல்வோரது வாகன அணிகளால் பிரதான தெருக்களில் மிகப் பெரும் நெரிசல் நிலைமை காணப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எங்கே செல்வது என்ற முடிவு தெரியாமலேயே பலரும் தலைநகரை விட்டுத் தற்காலிகமாக வெளியேறிச்செல்கின்றனர். அவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் மேற்கே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை நோக்கியே படையெடுத்துவருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

நகரில் உள்ள செய்தியாளர்களது தகவல்களின் படி, வான் தாக்குதல்களை எதிர்பார்த்து நகரவாசிகள் நிலத்தடி ரயில்நிலையங்களில் பதுங்கியுள்ளனர் என்றுசொல்லப்படுகிறது. தொடர்ந்தும் நகரில் சைரன் சத்தங்களைக் கேட்க முடிகிறது .நகரின் மையப்பகுதிகள் ஆள் அரவம்இன்றி வெறிச்சோடியுள்ளன.

ரஷ்யாவின் தாக்குதல்களை அடுத்து உலகெங்கும் முக்கிய பொருளாதார சக்திகளான நாடுகளில் பங்குச் சந்தைகள் பெரும் சரிவைக் காட்டியுள்ளன. எரிவாயு,மசகு எண்ணெய் விலைகள் என்றும் இல்லாதவாறு உச்ச அளவை எட்டியுள்ளன.

ரஷ்யாவுக்கு எதிராக மேற்கு நாடுகள் விதித்த தடைகள் போதுமானவையாக இல்லை என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் நேட்டோ நாடுகளின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை அவசரமாகக் கூடுகின்றனர். கூட்டாக எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகளை அங்கு அவர்கள்தீர்மானிப்பர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸின் தேசிய பாதுகாப்புச் சபை இன்று காலை அவசரமாகக் கூடியது. போர் நிலைவரம் தொடர்பாக அதிபர் மக்ரோன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு கலந்தாலோசனைகளை நடத்தினார். அதன்பிறகு நண்பகலில் அவர்நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

———————————————————————- –

பாரிஸிலிருந்து குமாரதாஸன்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More