Home இலங்கை வாழ்வாதார உதவிகளை வழங்குவதாக மோசடி – அவதானம்!

வாழ்வாதார உதவிகளை வழங்குவதாக மோசடி – அவதானம்!

by admin

– மயூரப்பிரியன் – 

வாழ்வாதார உதவிகளை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்து , வடமாகாணத்தில் பண மோசடியில் கும்பல் ஒன்று ஈடுபட்டு வருகின்றது.

சுமார் இரண்டு வருட காலங்களுக்கு மேலாக குறித்த கும்பல் மோசடியில் ஈடுபட்டு வரும் நிலையில் கும்பலுக்கு எதிராக உரிய தரப்புக்கள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க தவறி வரும் நிலையில் அக் கும்பல் தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

குறித்த கும்பலினால் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் வடக்கில் முல்லைத்தீவு , மன்னார் , வவுனியா , கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

ஐந்து மாவட்டங்களில் உள்ள பல காவல்நிலையங்களில் அக் கும்பலுக்கு எதிரான முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ள போதிலும் , மோசடி கும்பலுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

கும்பலின் இலக்கு.

குறித்த மோசடி கும்பல் கிராம சேவையாளர்கள் , கிராம மட்ட தலைவர்கள் , பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் , உதவி திட்டங்கள் வழங்குபவர்கள் உள்ளிட்ட தரப்பினரை முதலில் தொலைபேசி ஊடாக தொடர்பு கொள்வார்கள்.

அவர்களுடன் தொலைபேசியில்  ஊரில் உள்ள செல்வாக்கு மிக்க நபர்களின் பெயர்களை கூறி, அவர்கள் தான் தொலைபேசி இலக்கத்தை தந்தார் என கூறி அறிமுகம் ஆவார்கள்.

பின்னர் தாம் வாழ்வாதார உதவிகளை வழங்க தயார் என்றும்  அதற்கு தெரிவு செய்யப்பட கூடியவர்களின் விபரங்களை தந்து உதவுமாறும் கோருவார்கள்.

இவர்களும் அக் கும்பலின் கதையை நம்பி , வாழ்வாதார உதவி தேவைப்படும் வறுமையில் வாடும் குடும்பங்களின் விபரங்களையும் வழங்கி , அக் குடும்பத்தின் தொலைபேசி இலக்கங்களையும் வழங்கி விடுவார்கள்.

அவர்களிடம் இருந்து இலக்கங்களை பெற்றுக்கொள்ளும் கும்பல் , வாழ்வாதார உதவி தேவைப்படும் குடும்பத்துடன் தொடர்பு கொண்டு , தங்களுக்கு கிராம சேவையாளர் , கிராம மட்ட தலைவர் , பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் தான் தொலைபேசி இலக்கம் தந்ததாக கூறி தம்மை அறிமுகப்படுத்தி கொள்வார்கள்.

உதவி தேவைப்படுவோரும் , அவர்கள் கதையை நம்பி தமக்கு எவ்வாறான உதவிகள் கிடைத்தால் தாம் தம் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என கூறுவார்கள். அவர்களும் அந்த உதவியை வழங்க தயார் என உறுதி வழங்குவார்கள்.

பின்னர் ஓரிரு நாட்கள் அந்த குடும்பத்துடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உதவி வழங்க தயார் எனவும் சில மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்வது போன்றும் நம்பிக்கையை ஏற்படுத்தும் முகமாக தொலைபேசியில் உரையாடுவார்கள்.

பின்னர் ஒரு நாள் உங்களுக்கான உதவிகள் கிடைக்கப்பெற்று விட்டன. அதனை உங்களிடம் கையளிக்க தயார். ஆனால் போக்குவரத்து செலவு , வாகன வாடகை , மேலதிக செலவு என ஏதோ ஒரு காரணத்தை கூறி 20 ஆயிரம் முதல் 50ஆயிரம் வரை தங்களின் வங்கி கணக்கு இலக்கத்திற்கு அல்லது ez முறையில் பணத்தினை வைப்பில் இட கூறுவார்கள்.

உதவி தேவைப்படும் குடும்பமும் பணத்தினை அவர்கள் சொல்கின்ற முறையில் வைப்பிலிட்டவுடன் அக் கும்பலின் தொலைபேசி இலக்கம் செயலிழந்து விடும். அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டு விட்டோம் என அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

தாம் ஏமாற்றம் அடைந்து விட்டோம் என அறிந்த பின்னரே , தமது இலக்கத்தை கொடுத்தவரிடம் சென்று அது தொடர்பில் முறையிடுவார்கள்.

அவர்களும் அதன் பின்னரே தமக்கு எவ்வாறு அக் கும்பல் அறிமுகமாகியது என கூறுவார்கள். அவர்களும் தமக்கு அக் கும்பல் அறிமுகம் ஆகும் போது கூறிய நபரிடம் அக்கும்பல் பற்றி விசாரித்தால் அவர்களும், அது யார் என்றே தெரியாது என கைவிரித்து விடுவார்கள்.

அதன் பின்னர் பாதிக்கப்பட்ட தரப்பினர் காவல் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்வார்கள். ஏமாற்றப்பட்ட தொகை 20 ஆயிரம் முதல் 50 ஆயிரத்திற்குள் இருப்பதனால் , சிலர் காவல்துறை , நீதிமன்றம் என செல்வதற்கு தயக்கம் காட்டுவதனால் முறைப்பாடு வழங்காமல் தவிர்த்து கொள்கின்றனர்.

குறித்த மோசடி கும்பல் சில நாள் இடை வெளியில் மீண்டும்  மோசடியில் ஈடுபடுவதற்கான செயலில் இறங்கி விடுவார்கள்.

கிளிநொச்சியில் கிணறு வெட்டுவதாக மோசடி.

கிளிநொச்சியில் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பம் ஒன்றுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட கும்பல், தமக்கு கிராம சேவையாளரே தொலைபேசி இலக்கம் தந்ததாக கூறி அறிமுகம் ஆகி, அக் குடும்பத்திற்கு எவ்வாறான உதவி தேவை என கேட்டுள்ளது.

அக் குடும்பமும் தமக்கு குழாய் கிணறு ஒன்று அடித்து தருமாறு கோரியுள்ளது. அக்கும்பலும் அதற்கு சம்மதித்து, கிணறு அடிப்பதற்கான செலவீனங்கள் தொடர்பில் கணக்கு ஒன்றினை தருமாறு அக் குடும்பத்தினரிடமே கோரியுள்ளது.

கும்பலின் கதையை நம்பி அக் குடும்பமும்  கிணறு அடிக்கும் நிறுவனம் ஒன்றில் விசாரித்த போது, அவர்கள் கிணறு அடிக்க , அதற்கான குழாய் வசதிகள் உள்ளிட்ட இதர செலவுகள் என ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முடியும் என கணக்கு கூறியுள்ளனர். அதனை அக் குடும்பமும் , தமக்கு கிணறு அடித்து தருவதாக கூறியவர்களிடம் கூறியுள்ளனர்.

அக்கும்பலும் அதற்கான பணத்தினை ஏற்பாடு செய்த பின்னர் தொடர்பு கொள்கிறோம் என கூறி , சில நாட்களில் அக் குடும்பத்தினை தொடர்பு கொண்டு தம்மால் ஒரு இலட்ச ரூபாய் தர முடியும் மீதி 50 ஆயிரத்தை நீங்கள் தாருங்கள் என அக் குடும்பத்திடம் கோரியுள்ளது.

அவர்கள் தம்மிடம் அவ்வளவு பணம் இல்லை என கூறிய போது எவ்வளவு தர முடியும் என கேட்டுள்ளனர். அக் குடும்பம் 20 ஆயிரம் ரூபாய் தர முடியும் என கூறியதும், மீதி 30 ஆயிரத்தை தாம் ஏதாவது வழியில் புரட்டுவதாக கூறி , அவர்களின் 20 ஆயிரத்தை வங்கியில் தமது கணக்கிலக்கத்தில் வைப்பிலிட கூறியுள்ளார்கள்.


அதற்கு அக் குடும்பம் எதற்காக வங்கியில் நாம் பணத்தினை வைப்பிலிட வேண்டும் என கேட்டதற்கு தாம் பணத்தினை காசாலையாக தான் கிணறு வெட்டும் நிறுவனத்திற்கு கொடுப்போம். அதனால் உங்களின் 20 ஆயிரத்தை வைப்பிலிட்டால் தான் நாம் மொத்த தொகையாக ஒரு இலட்சத்து 50 ஆயிரத்தை காசோலையில் வழங்க முடியும் என கூறியுள்ளனர். அக் குடும்பமும் அவர்களின் கதையை நம்பி 20 ஆயிரத்தை வைப்பிலிட்டனர். அதன் பின்னர் அந்த தொலைபேசி இலக்கம் செயலிழந்தது.

முல்லைத்தீவில் ஆடு வழங்குவதாக மோசடி.

முல்லைத்தீவை சேர்ந்த ஒருவரிடம் கிராம மட்ட தலைவர் தொலைபேசி இலக்கம் தந்ததாக கூறி அறிமுகமாகி எவ்வாறான உதவியை எதிர்பார்க்கின்றீர்கள் என கேட்டுள்ளனர். அவரும் தான் ஆடு வளர்க்க விரும்புவதாக கூறியுள்ளார்.

பின்னர் சில நாட்கள் தொடர்பு கொண்டு , எவ்வாறு ஆட்டினை பராமரிப்பீர்கள் , ஆட்டினை வளர்க்க கூடிய சூழல் உள்ளதா என விசாரித்து வந்துள்ளனர்.

பின்னர் ஒரு நாள் தொடர்பு கொண்டு ஆடு வாங்கியாச்சு , அதனை தங்களிடம் கொண்டு வந்து தருவதற்கான போக்குவரத்து செலவினை நீங்கள் தான் ஏற்க வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு அவர் சம்மதித்ததும் , போக்குவரத்து செலவீனமாக 30 ஆயிரம் ரூபாய் பணத்தினை வைப்பிலிட கூறியுள்ளார்கள். அதனை நம்பி அவரும் பணத்தினை வைப்பிலிட்டதும்  அவர்களின்  தொலைபேசி செயலிழந்தது.

யாழில் கல்விக்கு உதவி வழங்குவதாக மோசடி.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரியிடம் தொடர்பு கொண்ட குறித்த கும்பல் , வைத்தியர் ஒருவரின் பெயரை கூறி , அவர் தான் தொலைபேசி இலக்கம் தந்ததாக அறிமுகமாகி தாம் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்திற்கு கல்வி உதவி திட்டங்களை வழங்க உள்ளதாக கூறியுள்ளனர்.

அவரும் அதனை நம்பி  தனக்கு தெரிந்த உதவி வழங்குனரின் இலக்கத்தை கொடுத்து , அவரிடம் கேட்டால் உதவி தேவை படுபவர்களின் விபரங்களை தருவார் என கூறி, அவரின் தொலைபேசி இலக்கத்தினை வழங்கியுள்ளார்.

அவரிடம் தொலைபேசி இலக்கத்தினை பெற்றுக்கொண்ட கும்பல் , உதவி வழங்குபவரிடம் தொடர்பு கொண்டு , தனக்கு நாடாளுமன்ற உறுப்பினரின் பொது மக்கள் தொடர்பு அதிகாரி தான் உங்களின் தொலைபேசி இலக்கம் தந்தார் என அறிமுகமாகி , உதவி தேவைப்படுபவர்களின் விபரத்தினை கோரியுள்ளார். அவரும் அந்த தகவல்களை வழங்கியுள்ளார்.

அவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் மூன்று குடும்பங்களை தொடர்பு கொண்ட கும்பல் பிள்ளைகளின் கல்விக்கு உதவி வழங்குவதாக கூறியுள்ளது.

பின்னர் யாழ்.நகர் பகுதிக்கு வந்து உதவியினை பெற்று செல்லுமாறு கோரியுள்ளனர். அதனை நம்பி ஒரு குடும்பம் யாழ். நகர் பகுதிக்கு சென்ற போது அவசரமாக தமக்கு 5ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது. ez மூலம் பணத்தினை அனுப்பினால் உதவி வழங்கும் போது , அந்த பணத்தினையும் திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.

அக் குடும்பமும் அதை நம்பி தொலைபேசி கடையில் 5ஆயிரம் ரூபாய் ez மூலம் அவர்கள் சொன்ன தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பியுள்ளனர். அதன் பின்னர் தம்முடன் தொடர்பு கொண்ட நம்பருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்த போது , அந்த இலக்கம் செயலிழந்துள்ளது.

அதன் பின்னரே தாம் ஏமாற்றப்பட்டதை அறிந்து , இவர்களின் தொலைபேசி இலக்கத்தை வழங்கியவருக்கு தகவல் வழங்கியுள்ளனர். அவர் தான் கொடுத்த ஏனையவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது தம்மையும் யாழ்.நகர் பகுதிக்கு வர சொன்னதாகவும் , தமக்கு அப்போது நேரமில்லை என கூறிய போது, பிறிதொருநாள் வருமாறு கூறியதாக கூறியுள்ளனர். உடனே அவர் அதொரு ஏமாற்று கும்பல் என கூறி அவர்கள் தொடர்பு கொண்டால் அறிவிக்குமாறு கூறியுள்ளார்.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்தில் சென்று முறைப்பாடு பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தினார். அத்துடன் தனது இலக்கத்தை கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினரின் மக்கள் தொடர்பு அதிகாரியிடமும் தகவலை கூறினார்.  அவர் தனக்கு வைத்தியர் ஒருவரின் பெயரை கூறி , அவர் தான் இலக்கம் தந்தார் என கூறியதால் தான் தான் நம்பினேன் என கூறியுள்ளார்

வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் கைவரிசை

இவ்வாறாக குறித்த கும்பல் வடக்கில் ஐந்து மாவட்டங்களிலும் சுமார் 2 வருட கால பகுதிக்கு மேலாக வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றது.

குறித்த கும்பல் சுமார் 20 ஆயிரம் – 50 ஆயிரம் வரையில் மோசடியில் ஈடுபவதனால் , இதனை ஒரு பெருங்குற்றமாக கருதி காவல்துறையினர் நடவடிக்கைகளில் இறங்காது அசமந்தமாக உள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்புக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பல பொலிஸ் நிலையங்களிலும் இந்த கும்பலுக்கு எதிரான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே வடமாகாண பிரதிகாவல்துறை மா அதிபர் , இந்த சம்பவம் தொடர்பில் வடக்கில் உள்ள காவல்நிலையங்களுக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை ஒன்று திரட்டி பார்த்தால் பாரிய பண மோசடி இடம்பெற்றுள்ளது தெரியவரும். அதனை கொண்டு துரித கெதியில் விசாரணைகளை முன்னெடுத்து மோசடி கும்பலை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் கோரியுள்ளனர்.

அதேவேளை இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுக்கும் பலர் தெரியப்படுத்திய போதும் அவர்களும் இது  தொடர்பில் கரிசனை இல்லாதது காணப்படுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

வறுமை கோட்டின் கீழ் வறுமையில் வாடும் குடும்பங்களை இலக்கு வைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த உதவுகிறோம் என தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக மோசடியில் ஈடுபட்டு வரும் கும்பலை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாகவுள்ளது. 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More