Home இலங்கை பொருளாதார நெருக்கடி – கைக்குழந்தையுடன் தனுஷ்கோடியை சென்றடைந்த இலங்கை தமிழர்கள்:

பொருளாதார நெருக்கடி – கைக்குழந்தையுடன் தனுஷ்கோடியை சென்றடைந்த இலங்கை தமிழர்கள்:

by admin



இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக அங்கு வசிக்கும்  மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக செல்ல ஆரம்பித்துள்ள நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை நான்கு மாத கைக்குழந்தையுடன் ஆறு இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.


ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம்  தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளது. இலங்கை தமிழர்கள் இறுதிக்கட்ட போரின் போது அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் வந்து இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.


இதே போல் தற்போது  இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை ஏற்றம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடுகள் அதிகமாக உள்ளதால்  இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக செல்லக் கூடும்  என்பதால் சர்வ தோச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என  கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.


இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை (21) இரவு மன்னார் மாவட்டம் பேசாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரி கிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர்,மோசஸ் உள்ளிட்டவர்களும், நான்கு மாத கைக்குழந்தையுடன்  ஆறு பேர் ஒரு கண்ணாடி இழை படகில் தமிழகம் நோக்கி பயணித்த நிலையில்  இன்று செவ்வாய்க்கிழமை (22) அதிகாலை   1 மணியளவில் தனுஷ்கோடியை அடுத்துள்ள 4 வது  மணல்  திட்டு பகுதியில் வந்து இறங்கி உள்ளனர்.


தகவலறிந்து இலங்கை தமிழர்களை அழைத்து வர மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சொந்தமான கப்பல் விரைந்தது. மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த  6  இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர்.


இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெய், டீசல்,பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களான தட்டுபாடு அதிகரித்துள்ளதால் தாம்  தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளதாக பாதுகப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

,
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் ஆறு இலங்கை  தமிழர்கள் மீது வழக்கு பதிவு செய்த மெரைன் காவல்துறையினா் அவா்களை ராமநாதபுரம்  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More