
இலங்கை முழுவதையும் அச்சத்துக்கு உள்ளாக்கிய உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் போது நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகளில் மன்னார் மாவட்டத்தில் பள்ளி முனை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரும் தள்ளாடி இராணுவ முகாம் முன்னாள் ராணுவ அதிகாரி ஒருவருமாக இருவர் பயங்கர வாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
தனது உடமையில் பீரங்கிக்கு பயன்படுத்தும் திரியை வைத்திருந்தார் என்ற அடிப்படையில் பள்ளிமுனை யை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு குறித்த பீரங்கி திரியை வழங்கிய குற்ற சாட்டில் தள்ளாடி இராணுவ முகாமை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் கடந்த 2019 ஆண்டு பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இருவரையும் விடுவிக்க கோரி காவல்துறையினர் ஊடாக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி சட்டத்தரணி எஸ்.டினேசன் கடந்த இரண்டு வருடங்களாக சமர்ப்பனங்கள் மேற்கொண்டு வந்த நிலையில் நீண்ட காலமாக அவர்களுக்கு பிணை நிராகரிக்கப்பட்டு இருந்ததுடன் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை பெற்று அவர்களை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் சட்டத்தரணி எஸ்.டினேசன் ஊடாக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பல முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்த தோடு நேரடியாகவும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் ஆலோசனை கோரப்பட்டிருந்தது.
இருப்பினும் குறித்த வழக்கு காலம் தாழ்த்தப்பட்டு வந்த நிலையில் இலங்கை உயர் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்ய தயார் நிலையில் இருந்த பொழுது குறித்த வழக்கு தொடர்பான விபரங்களை பரிசீலித்த சட்டமா அதிபர் திணைக்களம் குறித்த இருவரையும் விடுவிப்பதற்கான கடிதத்தை மன்னார் நீதவான் நீதி மன்றத்திற்கு நேற்றைய தினம்(4) வியாழக்கிழமை அனுப்பி வைத்திருந்தது
Add Comment