Home இலங்கை போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில் புனர்வாழ்வு நிலையம்

போதைக்கு அடிமையானவர்களை மீட்க யாழில் புனர்வாழ்வு நிலையம்

by admin

வட பகுதியில் போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வளிப்பதற்கு யாழ் நகருக்கு அண்மையில் புனர்வாழ்வு நிலையம் அமைக்க முயற்சி மேற்கொண்டு வருவதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். 

பப்ரல்  அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ் மாவட்ட பெண்கள் குழு நடாத்திய, “போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிஜைகளாக உருவாக்குவோம்”  எனும் தொனிப் பொருளிலான போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திருநெல்வேலி முத்துதம்பி இந்து மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

குறித்த விழிப்புணர்வு செயற்பாட்டில்  கலந்துகொண்டு உரையாற்றிய போதே, யாழ் மாநகர  முதல்வர் மேற்கண்டவாறு தெரிவித்தார்,

மேலும் தெரிவிக்கையில், 

எங்களுடைய பிரதேசமானமானது போதைப்பொருளினால், அச்சுறுத்தலையும், ஆபத்தினையும் எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றது.

தற்போது வெளிவரும் ஊடக செய்திகள் அனைவரையும் கவலைக்கு உள்ளாக்குகின்ற,கலக்கத்தை உண்டாக்குகின்ற பயங்கரமான செய்திகளாக உள்ளன.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகள் இவ்வாறு பாதிக்கப்பட்டு விடுவார்களோ? எனும் அச்சத்தில் தங்களுடைய வாழ்நாளை கழிக்கின்ற ஒரு அவல நிலைமை தற்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.

போதை பொருள் வர்த்தகர்களின் பிரதான இலக்காக பாடசாலை மாணவர்களாகத்தான் இருக்கின்றார்கள். பாடசாலை மாணவ, மாணவிகளை இலக்கு வைத்து, போதைப் பொருள்  விநியோகம் அண்மை காலங்களிலே அதிகரிக்கப்பட்டு வருகின்றது.

 இதனை தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய கடப்பாடு ஒவ்வொருவருக்கும் இருக்கின்றது. அதிலும் விசேடமாக அரசியல் தலைமைகள், சமூகமட்ட பிரதிநிதிகள், அதோடு பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் கல்வி சமூகம் அனைவரதும் கடமையாகும்.

எதிர்காலத்தில் இந்த போதைப்பொருள் பாவனைக்குள் உள்ளாகாதவாறு மாணவர்களை எவ்வாறு பாதுகாப்பது தொடர்பில் நாங்கள் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாழ் மாநகர முதல்வர் என்ற ரீதியில், போதைப் பொருளுக்கு எதிரான செயற்பாட்டினை முன்னெடுப்பதற்கு அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து விசேட கூட்டம் ஒன்றினை  நடத்த திட்டமிட்டுள்ளேன்.

போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை சிறைச்சாலைக்கு அனுப்புவதன் மூலம் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள்.

ஆகவே போதைப் பொருளுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை சமூகத்தோடு ஒருங்கிணைக்க முடியும்.

எனவே வடக்கில் யாழ் நகருக்கு அண்மையில் ஒரு இடத்தில் புனர்வாழ்வு நிலையம் ஒன்றினை அமைப்பதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். அதற்குரிய முயற்சியை  எடுத்து வருகின்றேன். அனைவரின் ஒத்துழைப்புடன் அந்த விடயம் விரைவில் கைகூடும் எனவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More