இலங்கை பிரதான செய்திகள்

யாழில் 120 மில்லியன் ரூபாய் மோசடி செய்த சகோதரிகள் கைது!

நோர்வே வாசியொருவரை ஏமாற்றி, 120 மில்லியன் ரூபாயை மோசடி செய்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை தொடர்ந்து சகோதரிகள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நாவாந்துறையைச் சேர்ந்த 30 மற்றும் 34 வயதுடைய இரு சகோதரிகளே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் ஒருவரை 2021 ஜனவரி முதல் கடந்த ஜூன் வரை 23 வங்கிக் கணக்குகள் மூலம் 120 மில்லியன் ரூபாயைப் பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இறந்த தங்கள் தந்தை ஒரு பணக்கார தொழிலதிபர் என்றும் அவருக்கு ஒரு பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான தங்க நகைகள் உட்பட பண சொத்துக்கள் இருப்பதாக அவர்கள் கூறி, அந்த நிதியை விடுவிப்பதற்கான சட்டச் சிக்கல்களைத் தீர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்கு பண உதவி தேவை எனவும் அவர்கள் கூறி மோசடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கட்டத்தின் பின்னரே இருவரும் தன்னை ஏமாற்றி வந்ததை நோர்வேயில் வசிக்கும் இலங்கையர் உணர்ந்துள்ளார். அவர் அளித்த முறைப்பாட்டின் பேரில் சகோதரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பல்வேறு அரச அதிகாரிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம அலுவலகர்களால் கையொப்பமிடப்பட்ட கடிதங்கள் உட்பட ஏராளமான போலி ஆவணங்களை வைத்திருந்தனர் எனவும், வங்கி புத்தகங்கள் மற்றும் வங்கி பற்றுச்சீட்டுகளும் அவர்களிடம் இருந்தன எனவும் தெரிவித்த காவற்துறையினர், இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளை, சகோதரிகள் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் டிசெம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.