இலங்கை பிரதான செய்திகள்

வடக்கு கடலில் தத்தளித்த வெளிநாட்டவர்கள் கே.கே.எஸ் கடற்படை முகாமில்

யாழ்ப்பாண கடற்பகுதியில் பழுதடைந்த நிலையில் தத்தளித்த படகொன்றில் இருந்தவர்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அழைத்து வரப்பட்டனர்.

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாலை மீன் பிடிக்க சென்று இருந்த மீனவர்கள், படகொன்று பழுதடைந்த நிலையில், கடலில் தத்தளித்தவாறு காணப்பட்டதை கண்ணுற்று அருகில் சென்று பார்த்த போது படகில் இருந்தவர்கள் தமது பிள்ளைகளை காண்பித்து உதவி கோரி அபய குரல் எழுப்பினர்.

உடனடியாக அது தொடர்பில் கடற்படையினருக்கு அறிவித்தனர். அதனை அடுத்து கடற்படையினர் அவ்விடத்திற்கு விரைந்து படகில் இருந்தவர்களுக்கு பாதுகாப்பு அளித்தனர். அத்துடன் படகினையும், படகில் இருந்தவர்களையும் மீட்டு காங்கேசன்துறை துறை முகத்திற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

வெளிநாட்டு படகு என்பதாலும், அதில் இருந்தவர்கள் வெளிநாட்டவர்கள் என்பதாலும் அவர்களை அழைத்து வருவதற்கான உரிய அனுமதிகள், நடைமுறைகள் என்பவற்றை பின் பற்றி அவர்களை காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வர தாமதமாகி இருந்தது.

அந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மதியத்திற்கு பின்னரே, கரைக்கு அவர்களை அழைத்து வந்தனர். அழைத்து வரப்பட்ட அனைவரும் காங்கேசன்துறை துறைமுக கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு, அவர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மருத்துவ பரிசோதனைகளுக்கு பின்னேரே அவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்து,  வாக்கு மூலங்களை பதிவு செய்ய முடியும் எனவும், அதன் பின்னரே அவர்கள் தொடர்பில் தெளிவாக அறிவிக்க முடியும் என கடற்படையினர் தெரிவித்தனர்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.