Home இலங்கை பழிக்கு பழி தீர்க்கவே சண்டிலிப்பாயில் வீடெரித்தோம் – சந்தேக நபர்கள் வாக்குமூலம்

பழிக்கு பழி தீர்க்கவே சண்டிலிப்பாயில் வீடெரித்தோம் – சந்தேக நபர்கள் வாக்குமூலம்

by admin

பழிக்கு பழி வாங்கவே சண்டிலிப்பாயில் வீடொன்றினை உடைத்து , வீட்டிற்கு தீ வைத்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக , சம்பவம் தொடர்பில் கைதாகியுள்ள சந்தேகநபர்கள் காவல்துறையினருக்கு வாக்கு மூலம் அளித்துள்ளனர்.

சண்டிலிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை புகுந்த வன்முறை கும்பல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இரண்டு மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்ததுடன் , வீட்டின் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வீட்டின் உடைமைகளை சேதமாக்கி , உடமைகளுக்கும் தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது.  அதில் சுமார் 20 இலட்ச ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் தீயில் எரிந்து நாசமாகின.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த  காவல்துறையினா் மானிப்பாய் பகுதியை சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இருவரை நேற்று முன்தினம்  புதன்கிழமை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.  அதன் போது , இதற்கு முதல் நடந்த வன்முறை சம்பவம் ஒன்றிற்கு பழி வாங்கவே இந்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவித்துள்ளனர்.  மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் , தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் , இரண்டு வாள்கள் , இரும்பு கம்பி ஒன்று என்பவற்றை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
அதேவேளை இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 06 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களையும் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
  யாழ்ப்பாணத்தில் வீடெரிப்பு சம்பவங்கள் , வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் வன்முறை கும்பல்களை கைது செய்வதற்கு, யாழ்.மாவட்ட சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் மஞ்சுள செனவிரத்தின் வழிகாட்டலில் , யாழ்.மாவட்ட விசேட குற்றத்தடுப்பு காவல்துறைப் பிரிவின் கீழ் குறித்த மூன்று சிறப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More