Home இலங்கை யாழ். மாநகர சபையின் செயற்பாட்டால் வணிகர் கழகம் கவலை

யாழ். மாநகர சபையின் செயற்பாட்டால் வணிகர் கழகம் கவலை

by admin

 

யாழ்.நகர் பகுதியில் , யாழ் மாநகர சபையினால் வாகன தரிப்பிட கட்டணம் வசூலிக்கப்படுவதால் , தமது வியாபர நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.வணிகர் கழகம் கவலை தெரிவித்துள்ளது.

அதேவேளை யாழ்.மாநகர சபையின் கட்டண வசூலிப்பால் தாம் சிரமங்களை எதிர்கொள்வதுடன் , பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக பொது மக்கள் நீண்ட காலமாக விசனம் தெரிவித்தும் வருகின்றனர்.
யாழ்.நகர் பகுதியில் குறிப்பாக வைத்தியசாலை வீதி , மின்சார நிலைய வீதி மற்றும் கஸ்தூரியார் வீதிகளில் துவிச்சக்கர வண்டிகள் , மோட்டார் சைக்கிள்கள் நிறுத்துபவர்களிடம் தரிப்பிட கட்டணம் அறவிடப்படுகிறது.
அவை வாகனங்களுக்கான பாதுகாப்பு கட்டணம் அல்ல, வாகனத்தை நிறுத்துவதற்கான தரிப்பிட கட்டணம் என கூறியே அறவிடப்படுகிறது.  அதவாது வாகனம் காணாமல் போனாலோ, வாகன பாகங்கள் காணாமல் போனாலோ அதற்கு அவர்கள் பொறுப்பாளிகள் அல்ல.
துவிச்சக்கர வண்டிகளுக்கு 20 ரூபாயும் , மோட்டார் சைக்கிள்களுக்கு 30 ரூபாயும் அறவிடப்பட்டு வருகின்றன. அவ்வாறு அறவிடப்படும் போது மிகுதி பணம் இல்லை என மிகுதியை கொடுக்காத சந்தர்ப்பங்களும் உண்டு.
அத்துடன் கட்டணம் அறவிடும் நபர்கள் மாநகர சபையினால் குத்தகைக்கு வழங்கப்பட்டு , அதனை எடுத்துக்கொண்ட மூன்றாம் நபர்களே.. அவர்கள் உரிய முறையில் ஒழுக்கமாக நடந்து கொள்பவர்கள் இல்லை எனும் விசனமும் உண்டு.
இவ்வாறு கட்டணம் அறவிடப்படுவதனால் , வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு உணவு வழங்க, மோட்டார் சைக்கிளில் வருவோர், மூன்று வேளையும் தலா 30 ரூபாய் வீதம் நாளொன்றுக்கு 90 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர்.
அதேபோல கடைகளில் பொருட்களை கொள்வனவு செய்ய செல்வோரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தியவுடன் கட்டணம் வசூலிப்பவர் பணத்தினை வசூலித்து சென்று விடுகிறார். இது தொடர்பில் மக்கள் கடும் விசனம் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் , தற்போது இந்த கட்டண வசூலிப்பால் , தமது கடைகளுக்கு வரும் மக்கள் குறைந்துள்ளதாக யாழ்.வணிகர் கழகம் கவலை தெரிவித்துள்ளது.
தமது கடைகளில் சிறு பொருட்களை வாங்க வருவோரிடமும் , தரிப்பிட கட்டணம் வசூலிப்பதால் பொருட்களை வாங்க வருவோர் தமது கடைகளை தவிர்த்து கொள்கின்றனர்.
ஏற்கனவே பொருளாதார நெருக்கடிகளினால் பொருட்களின் விலை அதிகரிப்பால் , வியாபாரங்கள் பெரிதளவில் நடக்காத நிலையில் , கடைகளுக்கு வரும் வாடிக்கையார்களிடம் தரிப்பிட கட்டணம் அறவிடுவதால் வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு வருவதை தவிர்த்து கொள்கின்றனர். எனவே வாகன தரிப்பிட கட்டணத்தை வசூலிப்பதனை நிறுத்துமாறு யாழ்.மாநகர சபையிடம் கோரியுள்ளோம். அவர்கள் இதுவரையில் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என கவலை தெரிவித்தனர்.
இதேபோன்றே வடமாகாணத்தில் உள்ள உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும் முகமாக கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளோம்.
அதற்காக நாம் 140 கூடங்களை அமைத்து அவர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளோம். அவ்வாறு கொடுக்கப்பட்ட கூடம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய் மாநகர சபைக்கு வரி கட்ட வேண்டும் என எமக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
இதற்கு நாம் எதிர்ப்பை தெரிவித்து மாநகர சபைக்கு கடிதம் அனுப்பியுள்ளதுடன் , வடமாகாண ஆளுநருக்கும் கடிதம் அனுப்பியுள்ளோம் என யாழ். வணிகர் கழகம் தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More