Home உலகம் ஜப்பானில் 7.6 நிலநடுக்கம் – பெரும் சுனாமி எச்சரிக்கை!

ஜப்பானில் 7.6 நிலநடுக்கம் – பெரும் சுனாமி எச்சரிக்கை!

by admin

பட மூலாதாரம்,REUTERS

ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் அமைந்திருக்கும் மத்திய கடற்கரை பிராந்தியமான இஷிகவாவை மையமாக கொண்டு 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து நோட்டோ உள்ளிட்ட கடற்கரையோரப் பகுதியில் தீவிர சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“இந்தப் பகுதியில் உள்ள அனைத்து மக்களும் உடனடியாக வெளியேற வேண்டும்” என்று என்.எச்.கே. என்ற ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் நோட்டோ பகுதியின் கடற்கரை பகுதியில் உள்ள மக்களை “உயரமான பகுதிகளுக்கு உடனடியாக செல்லுமாறு” இஷிகவா அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

5 மீட்டர் உயரமுள்ள அலைகள் நோட்டோ பகுதியை நோக்கி வந்துள்ளதாக ஜப்பானின் அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

நோட்டோ பகுதிக்கு அருகிலுள்ள நீகாட்டா, டோயாமா உள்ளூர் நிர்வாகமும் சுனாமி எச்சரிக்கையை மக்களுக்கு விடுத்துள்ளது. இந்த பகுதிகளில் 3 மீட்டர் உயரமுள்ள அலைகள் வரக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

‘காலி செய்யுங்கள்’ என்ற வாசகம் ஜப்பானின் அரசு தொலைக்காட்சியில் பெரிய வடிவில் தோன்றி மக்களை உயரமான பகுதிகளுக்கு செல்லுமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய எச்சரிக்கை

ஜப்பானின் மேற்கு கடலோர பகுதியில் அமைந்திருக்கும் இஷிகவா, நீகாட்டா, டோயாமா, நகானோ ஆகிய பகுதிகளில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக புதிய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அரசின் செய்தித்தொடர்பாளரான யோசிமாஷா ஹயாஷி, உள்ளூர் மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில் மேலும் நிலநடுக்கம் வர வாய்ப்புள்ளதாகவும், மக்கள் அதற்கேற்றார் போல் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

உள்ளூர் நேரப்படி மாலைக்கு பிறகு கடந்த 3 மணி நேரத்தில் மத்திய ஜப்பானின் இந்த பகுதிகளில், 30 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக 7.6 என்ற அளவில் ரிக்டர் ஸ்கேலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அணு உலைகளுக்கு பாதிப்பா?

ஜப்பான் சுனாமி

பட மூலாதாரம்,JAPAN METEOROLOGICAL AGENCY

நிலநடுக்கம் ஏற்பட்டதையும், சுரங்க மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சம் புகுந்துள்ளதையும் வீடியோவாக எடுத்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

முன்னதாக நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, 0.3 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள், இந்திய நேரப்படி மதியம் 02.48 முதல் 03.47 இடையே ஜப்பான் கடற்கரையை தாக்கக்கூடும் என்று தென் கொரியா வானிலை மையம் எச்சரிக்கை விடுத்தது.

ஜப்பான் அணு உலை பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தை அதிகாரிகள், நிலநடுக்கத்தால் அணு உலையிலிருந்து எவ்வித அணுக் கதிர்வீச்சும் கசியவில்லை என்று தெரிவித்துள்ளது.

ஜப்பானின் மிகப்பெரிய அணு உலை மின்சார தயாரிப்பாளரான கன்சாய் எலெக்ட்ரிக் நிறுவனம், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் இருக்கும் அணுஉலைகளில் ‘அசாதாரண நிலை ஏதுமில்லை’ என்று விளக்கமளித்துள்ளது.

முன்னதாக 2011ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தையடுத்து அணு உலைகள் பாதிக்கப்பட்டன. இந்த அணு உலை விபத்தினால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

 

கரையை தாக்கிய சுனாமி

ஜப்பான் சுனாமி

பட மூலாதாரம்,REUTERS

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், முதல் சுனாமி அலை மத்திய ஜப்பானின் வடக்கு கடற்கரையை தாக்கியது.

கரைக்கு வந்த சுனாமி அலைகளில் சில அலைகள் சுமார் 1 மீட்டர் உயரம் வரை இருந்தாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி மாலை 04.21 மணிக்கு 1.2 மீட்டர் உயரமுள்ள சுனாமி அலைகள் இஷிகவா பகுதியில் அமைந்துள்ள வஜிமா துறைமுகத்தை தாக்கின. டோயாமா நகரத்தில் 0.8 மீட்டர் வரை உயரமுள்ள சுனாமி அலைகள் உருவாகின.

சுனாமியால் என்ன பாதிப்பு?

ஜப்பான் நிலநடுக்கம் சுனாமி

பட மூலாதாரம்,EPA

நிலநடுக்கம் மற்றும் சுனாமியைடுத்து இஷிகவா பகுதியிலிருந்து டோக்கியோ நகரத்திற்கு இயக்கப்படும் புல்லட் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக ஜப்பான் ரயில்வே அறிவித்துள்ளது.

இஷிகவா பகுதியிலுள்ள சூசு நகரத்தில் நிலநடுக்கத்தால் பல வீடுகள் மற்றும் மின்சார கம்பங்கள் ஆகியவை முற்றிலும் இடிந்ததாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள இஷிகவா பிராந்தியத்தில் 36,000 வீடுகளுக்கு மின் விநியோகம் தடைபட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகளை சுட்டிக் காட்டி கியோடோ நியூஸ் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தின் மையப்புள்ளியான இஷிகவாவிற்கு செல்லும் முக்கிய நெடுஞ்சாலைகளும் மூடப்பட்டுள்ளன.

BBC

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More