இலங்கை வெளிநாட்டுச் சேவையை அரசியலாக்குவது குறித்து கடந்தகால விமர்சனங்கள் இருந்தபோதிலும், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் வெளிநாடுகளில் உள்ள இலங்கையின் முக்கிய தூதரகங்களுக்குத் தலைமை தாங்குவதற்கான அரசியல் நியமனங்களைச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர், வெளிவிவகார அமைச்சு, அமெரிக்காவுக்கான தூதுவராக தொடர்ந்து பணியாற்றும் திரு.மகிந்த சமரசிங்கவைத் தவிர, ஏனைய அரசியல் ரீதியாக நியமிக்கப்பட்ட அனைத்து இலங்கை தூதுவர்களையும் திரும்ப அழைத்தது.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிபெறும் செயன்முறைக்காகவே மகிந்த சமரசிங்க அவரது பணியைத் தொடர அனுமதிக்கப்படுகிறார் என தற்போதைய அரசாங்கம் கூறிவந்தது. இருந்தபோதும், முக்கியமான தலைநகரங்களில் இலங்கையின் தூதரகங்களுக்குத் தலைமை தாங்குவதற்கு மேலும் சில அரசியல் நியமனங்களைச் செய்ய அரசாங்கம் இப்போது முயன்றுள்ளமை தெரிய வருகின்றது.
அவர்களில், டோக்கியோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தலைவராக பேராசிரியர் ஜனக குமாரசிங்க பரிந்துரைக்கப்படுவார் என்றும் முன்னாள் விமானப்படைத் தளபதி உதேனி ராஜபக்ச தென்னாபிரிக்காவிற்காக பரிந்துரைக்கப்பட்டுவார் என்றும் கூறப்படுகிறது. நிமல் சேனாதீர ஐக்கிய இராச்சியத்திற்கான உயர்ஸ்தானிகராக தெரிவு செய்யப்படுகிறார் என்றும் பேராசிரியர் அருஷா குரே ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்குப் பரிந்துரைக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் மனைவியான சோனாலி சமரசிங்கவை நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர தூதுக்குழுவின் அமைச்சர் ஆலோசகராக நியமிப்பதாக அண்மையில் முடிவெடுக்கப்பட்டதாகவும் இராசதந்திரி மஹிசினி கொலோன், புதுடெல்லிக்கான இலங்கையின் அடுத்த உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

