வழங்கத் திட்டமிடப்பட்டுள்ள மீதமுள்ள அனைத்துக் கடவுச்சீட்டுகளும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் என்று கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற பத்தாவது நாடாளுமன்றத்தின் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத்தில் பொதுப் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரான ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
24 மணி நேர கடவுச்சீட்டு வழங்கும் சேவை தொடங்கப்பட்டுள்ளமையை அமைச்சர் உறுதிப்படுத்தியதுடன், தேவையான அச்சிடும் உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டவுடன் யாழ்ப்பாணத்தில் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் நிறுவப்படும் எனவும் தெரிவித்தார். உள்ளூராட்சி சபை அலுவலகங்களில் வழங்கப்படும் கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையும் இரட்டிப்பாக்கப்படும் என்பதையும் அமைச்சர் உறுதிப்படுத்தினார்.