முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்காகக் கதிர்காமத்தில் கட்டப்பட்ட வீடு தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் (சிஐடி) தன்னிடம் விசாரணை நடத்தியதாக ருஹுணு கதிர்காம மகா தேவாலயத்தின் பஸ்நாயக்க நிலமே திஷான் குணசேகர தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய திஷான் குணசேகர, இந்த வீடு விமலரத்ன என்ற நபரால் கட்டப்பட்டது என்றும், கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் அப்போதைய பீடாதிபதியால் நிதியளிக்கப்பட்டது என்றும் தொிவித்துள்ளாா்.
வீட்டைக் கட்டியவர் தற்போது உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், கதிர்காமம் கிரிவெஹெர விகாரையின் அப்போதைய தலைமை தேரர் காலமானார் என்றும் கூறிய திஷான் குணசேகர, கட்டிடம் தொடர்பான விவரங்களை அறிந்த ஒரே நபர் அவர் தான் என்றும் கூறினார்.
மேலும், சொத்து பற்றிய விவரங்களை வழங்குவதற்காக, சிஐடி தன்னை அழைத்ததாக அவர் கூறினார். அந்த வீடு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்குச் சொந்தமானது அல்ல என்றும், கதிர்காமம் கிரிவெஹெர விகாரையில் அப்போதைய தலைமை தேரரால் மஹிந்தவுக்காக கட்டப்பட்டது என்றும் திஷான் குணசேகர வெளிப்படுத்தினார்.
“போரின் போது, மஹிந்த ராஜபக்ச ஆலயங்களுக்குச் சென்றபோது, அவர் விடுதிகளில் தங்கவில்லை, மாறாக வீடுகளில் அல்லது ஆலய சொத்துக்களுக்குள் கட்டப்பட்ட சிறிய இணைப் பகுதிகளில் தங்கினார். சந்தேகத்திற்குரிய இந்தச் சொத்தும் இதே போன்ற கட்டிடம்தான்,” என்று அவர் மேலும் கூறினார்.

