110
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதீத வெப்பமான கால நிலையால், நேற்றைய தினம் புதன்கிழமை (30.04.25) வீதியில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த கந்தசாமி கலியுகவரதன் (வயது 55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மதிய நேரம் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மயங்கி விழுந்துள்ளார். அவரை வீதியால் சென்றவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் , அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.
மரண விசாரணையின் போது, வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் , மயக்கம் ஏற்பட்ட நிலையில் மரணம் சம்பவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை உணவை அருந்தாது , வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதாக வீட்டார் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை கடந்த திங்கட்கிழமை இணுவில் பகுதியில் உள்ள தோட்ட வெளியில் பயணித்துக்கொண்டிருத்தவர் வெப்பத்தால் ஏற்பட்ட பாதிப்பினால் உயிரிழந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருத்தவர் தவறி விழுந்து உயிரிழப்பு
வீட்டின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை தவறி விழுந்தவர், வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஜோர்ஜ் அன்ரனிதாஸ் (வயது 60) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கடந்த 20 ஆம் திகதி புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை வேய்ந்து கொண்டிருந்த வேளை கூரையில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு , சிகிச்சை பெற்று வந்தார்.
அந்நிலையில் நேற்றைய தினம் புதன்கிழமை (30.04.25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love