Home இலங்கை தீவகத்திற்கான வாக்கு பெட்டிகள் நாளை திங்கட்கிழமை எடுத்து செல்லப்படும்

தீவகத்திற்கான வாக்கு பெட்டிகள் நாளை திங்கட்கிழமை எடுத்து செல்லப்படும்

by admin

 

நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலின் போது, நெடுந்தீவு, நயினாதீவு, எழுவைதீவு மற்றும் அனலைதீவு ஆகிய தீவுகளுக்கான கடல்வழிப் போக்குவரத்து தொடர்பாக, கடற்படை அதிகாரிகளுடன் முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட  செயலரும், தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் சனிக்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதன் போது, கடற்படையின் ஒத்துழைப்பினை குறிப்பாக தீவக போக்குவரத்துக்கு கடற்படையின் ஒத்துழைப்பினை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அந்த வகையில் கடல்வழியா தீவகபகுதிக்கு தேர்தல் கடமைக்காக செல்லவுள்ள சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் பயண ஒழுங்கு தொடர்பாக ஆராயப்பட்டு, குறிகட்டுவான் படகுத் துறையிலிருந்து நெடுந்தீவுக்கு  வடதாரகை கப்பல் மூலமும், நயினாதீவுக்கு தனியார் படகு மூலம் நாளைய தினம் திங்கட்கிழமை காலை 09.00 மணிக்கும், ஊர்காவற்றுறை படகுத் துறையிலிருந்து  எழுவைதீவு மற்றும் அனலைதீவுக்கு கடற்படை படகுகள் மூலம் காலை 09.00 மணிக்கும் செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளவது எனத் தீர்மானிக்கப்பட்டது.

மேலும், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும்  நாடாளுமன்றத் தேர்தல்கள் சுதந்திரமாகவும் சுமூகமாக நடைபெற்றதாகவும் குறிப்பாக தீவக கடல் போக்குவரத்திற்கு  ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தமது நன்றியினை  கடற்படையினருக்கு தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துக் கொண்டார்.

இக் கலந்துரையாடலில்  பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் இ. சசீலன் அவர்களினால்  வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் ஏனைய ஏற்பாடுகள் தொடர்பான விபரங்களை முன்வைத்தார். இக் கலந்துரையாடலில் தேர்தல் கடமைக்காக இணைக்கப்பட்ட சுகாதார அமைச்சின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் திரு. பொ. தயானந்தன், முறைப்பாட்டுப் பிரிவின் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர் ப. பிரபாகர் ஆகியோரும் உடனிருந்தார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More