Home இலங்கை றியாஸ் அகமட்டின் மிதிவண்டிப் பயணத்தின் அறிதலும், அறிதலுக்கான பயணமும்.

றியாஸ் அகமட்டின் மிதிவண்டிப் பயணத்தின் அறிதலும், அறிதலுக்கான பயணமும்.

பேராசிரியர் சி.ஜெயசங்கர்.

by admin

கல்வி இயங்கு நிலைக்குரியது. அது சூழலுடனும் மனிதர்களுடனும் இணைந்த செயற்பாட்டிற்குரியது. நவீன காலத்திற்கு முந்திய உள்ளூர் அறிவுமுறைகளைப் பார்க்கும் பொழுது இந்த விடயங்களை நாம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அறிவதற்காகப் பயணம் செய்தார்கள் அல்லது பயணம் செய்தலின் ஊடாக அறிந்து கொண்டார்கள். இந்த அறிவு சூழல் பற்றியதாகவும்;;;;;; ஒவ்வொரு சூழலில் வாழும் மனிதர்கள் அவர்களுடைய வாழ்க்கை முறைகள் வாழ்க்கை முறைக்கான அடிப்படைகள் என்பவற்றை அறிவதாகவும் இருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு துறை சார்ந்த அறிவியல் என்பது சிறுபராயம் முதலே குடும்பத்தாருடன் அல்லது அவற்றை அந்த அறிவுமுறை சார்ந்தவர்களுடன் சேர்ந்து துணையாக இயங்குவதன் ஊடாக அறிவை, அனுபவத்தை பெற்றுக்கொண்டு; அவற்றின் ஆழ்புலங்களை அறிவதற்காக மேலும் மேலும் தேடலை வகுத்துக் கொண்டு பல்வகையிலும் பயணம் செய்வதும்; சமாந்தரமாக செயற்பட்டுக் கொண்டும், வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும் ஊடாக இந்த அறிவு உருவாக்கம் நிகழ்கிறது.

இந்த அறிவுருவாக்கத்தின் அடிப்படை செயல், செயலுக்கான தேடல், அதற்கான பயணம் என்பதன் ஊடாக நேரடி அவதானம், நேரடி உரையாடல், நேரடிப் பயில்வு என்பவற்றின் ஒரு தொடர் பயணத்தின் ஊடாக பெறப்படும் அறிவு, அனுபவத்திரட்சி என்பது மேலதிக தேடல்களுக்கூடாக ஒரு நிபுணத்துவ ஆற்றலாக வளர்த்துக் கொள்ளப்படுவதை நாங்கள் நவீன காலத்துக்கு முந்திய உள்ளூர் அறிவு முறைகளில் காணமுடியும்.

காலப்போக்கில் இவற்றின் தேட்டங்களை பல்வேறு வகைகளிலும் அவர்கள் பதிவு செய்து வைத்திருந்தார்கள். குறிப்பாக நினைவில் வைத்திருத்தல் என்பது இந்தக் கற்றல் முறையினுடைய அடிப்படையாக இருந்தது. இந்தக் கற்றல் முறையினுடைய வெளிப்பாடு என்பது சுய சிந்தனைகளுக்கும், சுய வியாக்கியானங்களுக்கும், புதிய உருவாக்கங்களுக்கும் காரணமாக அமைந்தது.
நவீன அறிவு என்று சொல்லப்படுகின்ற காலனியம் எங்களுக்கு அறிமுகப்படுத்திய கல்வி முழுக்க முழுக்க சிறைச்சாலைக்கு சமாந்தரமான கட்டிட அமைப்புக்களுக்குள் சீமெந்துச் சுவர்களால், கம்பிவலைகளால் காவலிடப்பட்ட வகுப்பறைகளுக்குள் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட புத்தகங்களை அடிப்படையாகக் கொண்டவை. இந்த புத்தகங்களில் இருப்பவை மிகப் பெரும்பாலும் அந்தப் புத்தகங்களை தயாரிப்பவர்கள் மற்றும் அந்தக் கல்வி முறையை அறிமுகப்படுத்தியவர்களது நோக்கங்களுக்கு ஏற்ப அவர்களே உயர்வானவர்களாகவும், அவர்களே உருவாக்க வல்லவர்களாகவும் கருதப்பட வேண்டும் என வடிவமைத்திருக்கிறார்கள்.
இவைகளைக் கற்கின்ற காலனித்துவப்படுத்தப்பட்ட நாடுகளில் இருக்கின்ற மனிதர்கள் இவற்றால் வடிவமைக்கப்படும் ஒரு ஆபத்தான கல்வி முறைமையே நவீன கல்வி முறை என்றும், விஞ்ஞானபூர்வமான கல்வி முறை என்றும் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

இந்த நவீன கல்விமுறைக்குள் வந்தவர்களுடன் உரையாடும் பொழுது அவர்கள் கற்கும் புத்தகங்களில் கண்டுபிடிப்புகள், கண்டுபிடிப்பாளர்கள் பட்டியலில் உள்ளூர்க்காரர்கள் ஏன் இருப்பதில்லை என்று கேட்கும் பொழுது பாடசாலைகளில் பதிமூன்று வருடம் முழுநேர மாணவர்களாக வாழ்ந்து பின்பு பல்கலைக்கழகத்திற்கு தேர்வு செய்யப்பட்டு அவர்கள் மூன்று அல்லது நான்கு ஆண்டுகளில் இருக்கும் பொழுது பொதுவாக அளிக்கப்படுகின்ற விடை எதுவாக இருக்கின்றதென்றால்;; அது ஆங்கிலேயர்கள் தான் கண்டுபிடிப்பார்கள், நாங்கள் சோம்பேறிகள், அவர்கள் கண்டுபிடிக்கட்டும் நாங்கள் பயன்படுத்துவோம், எங்களது புது ஆக்கங்களை எம்மவர்கள் குழிதோண்டிப் புதைத்து விடுவார்கள், அதற்கு ஒத்துழைப்பு தரமாட்டார்கள் என்ற வகையான எங்களால் முடியாது அல்லது எங்களால் முடிந்தாலும் எம்மவர்கள் அதற்கு இடந்தரமாட்டார்கள் என்ற வகையான் ஒரு மிகவும் பாதகமான சிந்தனை உருவாக்கமே இந்த முழுநேர கல்வி முறைக்குள்ளால் தேறிவந்தவர்களுடைய புத்தியில் பதிந்திருப்பது என்பது நாங்கள் கொண்டாடக் கூடிய விடயம் அல்ல. மிகமுக்கியமாக ஆபத்தானதாகப் புரிந்து கொண்டு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொள்ள வேண்டும்.

இந்தக் கல்விமுறையில் நாங்கள் கண்டுபிடிப்பு திறன் உள்ளவர்களாக அதாவது மனிதர்களின் அடிப்படை இயல்பான கற்பனை செய்தல், சிந்தித்தல், உருவாக்குதல், செயற்படுதல், மதிப்பீடு செய்தல் என்ற இயல்புகள் மழுங்கடிக்கப்பட்ட மனிதர்களாக உருவாக்கப்படுவதே மிகப் பெரும்பாலும் நடைமுறையாக இருக்கின்றது.

இத்தகைய பின்னணியில்தான் நாங்கள் மரபுக் கல்விமுறையில் இருக்கின்ற அதற்கே இயல்பான சூழலுடன் இணைந்த அதில் வாழும் மனிதர்கள் உயிர்களுடன் இணைந்து ஒரு செயல்மையக் கல்விமுறை என்பது எங்களினுடைய இந்த இருபத்தோராம் நூற்றாண்டுக்கு மிகவும் அவசியமானது என்பதை சிந்திக்க வேண்டியும் செயற்பட வேண்டியுமிருக்கின்றது.

நாங்கள் எல்லா மனிதர்களும் எங்களுடைய முரண்பாடுகளை நீக்கி ஒரு சமத்துவ சமூகமாக வாழ்ந்து எங்கள் அறிவில் எங்கள் திறனில் எங்கள் வளங்களில் இருந்து நாங்கள் உருவாக்கவும் உற்பத்தி செய்யவும் இவற்றின் ஊடாக வெளிச்சூழலுடன் கொடுத்து வாங்குகின்ற இயல்பு உள்ளவர்களாக உருவாவது என்பது இன்றைய காலத்தில் அத்தியாவசியத் தேவையாகும்.

ஆயினும் அத்தகைய ஒரு மாற்றத்திற்கான கல்வி முறை பற்றிய சிந்தனை எங்களிடம் மிக அருந்தலாகவே காணப்படுகின்றது. இவ்வாறாக இருக்கின்ற இயங்குநிலை அற்ற செயற்பாடு குன்றிய ஒரு தராதரப் பத்திரத்தை பெற்றுக்கொண்டு அந்த தராதரப் பத்திரத்தை வைத்து ஒரு தொழிலை ஆக்கத்திறன், உற்பத்தித்திறன் அற்ற ஒரு பணியாள் தனமான தொழிலை பெற்றுக் கொள்வதற்கான நோக்கிலேயே எங்களுடைய கல்விமுறை நகர்ந்து கொண்டிருக்கின்றது.

இந்தக் கல்விமுறையை வைத்துக்கொண்டு நாங்கள் சொந்தத் தொழிலில் ஈடுபடுவது பற்றி மாணவர்களுடன் உரையாடுவது என்பது பொருத்தமற்றது. ஏனென்றால் அவர்களது கற்பனை, சிந்தனை, செயற்பாடு, படைப்பாற்றல், மதிப்பீட்டுத் திறன் என்பவற்றை கண்டுபிடிக்க விடாத கல்விமுறையை வைத்துக்கொண்டு அவர்களை அத்தகைய மனிதர்களாக சுயமாக இயங்குகின்ற கோரிக்கையை முன்வைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

இத்தகைய ஒரு பின்னணியில் தான் றியாஸ் அகமட் அவர்களுடைய இந்த சைக்கிள் பயணம் என்பது எவ்வாறு ஒரு சமாந்தர கல்வி முறையாக, இயங்குநிலைக்குரியதாக, சூழலையும் சூழலில் வாழ்கின்ற உயிர்கள் மனிதர்களை இணைத்த ஒரு செயல்பாட்டுக்குரிய கல்வி முறையாக ஆக்கியிருக்கின்றது என்பது ஆழமாக விளங்கிக் கொள்ளப்பட வேண்டியிருக்கின்றது.

இவருடைய இந்தச் செயல்பாடுகள் எதுவும் பல்கலைக்கழக பதவி உயர்வுகளுக்கு அவருக்கு கைகொடுக்கப் போவதில்லை. ஏனென்றால் பல்கலைக்கழக பதவி உயர்வுக்கான வேலைத் திட்டங்கள் இவ்வாறானவை அல்ல அல்லது இவ்வாறானவை எதுவும் அங்கு கணக்கெடுக்கப்படுவதில்லை. மாறாகக் கழித்து விடப்படுவனவாகவே இருக்கின்றன.

இதுதான் நாங்கள் இன்னும் காலனிய கல்விச் சூழலில் இருந்து எங்களை விடுவித்துக் கொள்ளவில்லை என்பதற்கு தெளிவான ஒரு சாட்சியாக இருக்கின்றது. எவ்வாறு அவருடைய இந்த சைக்கிள் பயணம் என்பது அது அவருக்குரிய அறிதல், அனுபவம், செயற்பாடு என்பதை கடந்து அவர் நேரடியாக சந்திக்கும் மனிதர்களிடம் இருந்து அவர் புதிதாக அறிந்திருக்கும் சூழலில் இருந்து அவர் இவற்றைக் கற்றுக்கொள்கின்ற அந்தக் கற்றல் எவ்வாறு அவருக்கும், சூழலுக்கும், மனிதர்களுக்கும் எல்லா உயிர்களுக்கும் சாதகமாக அமைகின்றது, அமைந்திருக்கின்றது என்பதற்கு இந்த நூல் சாட்சியாகும்.

இவ்வாறு அவருடைய பயணங்களை அவர் முகநூலில் பதிவு செய்யும்போது அது எவ்வாறு பல எல்லைகள் தாண்டிய அறிதலுக்கும், பகிர்தலுக்கும், செயற்படுத்துதலுக்கும், மாற்றத்திற்கும் உரிய விடயமாகி இருக்கின்றது என்பதும் இங்கு நாங்கள் கவனிக்க வேண்டிய விடயமாகும்.

இந்த வகையில் நாங்கள் குழந்தை ம. சண்முகலிங்கத்தினுடைய நாடக அரங்க கல்வி செயற்பாடுகள் ஓவியர் அ.மாற்குவினுடைய ஓவியச் செயல்பாடுகள், மூன்றாவது கண் நண்பர்கள் குழாமுடைய உள்ளூர் அறிவு திறன் சார்ந்த செயல்பாடுகள் என்பன திறந்த வெளிகளில் இயங்குவதன் ஊடாக, செயல்படுவதன் ஊடாக கற்றலை முன்னெடுத்து வருபவை.

குழந்தை ம. சண்முகலிங்கம், ஓவியர் அ.மாற்குவினுடைய வீட்டுமுன்றில்களில் முன்னெடுக்கப்படுகின்ற அல்லது வெளிச்சூழல்களில் முன்னெடுக்கப்படுகின்ற இந்த நாடக, ஓவிய கற்றல் செயல்பாடுகள் பல திறமைமிக்க கலைஞர்களை உருவாக்கி இருக்கின்றது. உலகம் முழுக்க இருக்கின்ற ஈழத்து நாடககாரர்கள், ஓவியக்காரர்கள் என்பவர்கள் இந்த மனிதர்களுடைய வீட்டு முற்றங்களில் இருந்து உருவானவர்கள். ஏனென்றால் அந்தக் கல்விச் சூழல் என்பது இயங்கு நிலைக்குரியது, செயற்பாட்டுக்குரியது. சூழலுடன் தொடர்புடையது.

பல்வேறு உரையாடல்கள், செயற்பாடுகள், ஆற்றுகைகள், காட்சிப்படுத்தல்கள், அதற்கான தயாரிப்புக்கள், அது சார்ந்த கோட்பாட்டு உரையாடல்கள், மதிப்பீடுகள் என்று பலதரப்பட்டவர்களுடனும் ஒரு யதார்த்த சூழலில் இயங்குவதன் ஊடாக சாதிக்க பெற்றவையாக மேற்குறித்த அறிவுருவாக்க செயற்பாடுகள் காணப்படுகின்றன.

அந்தவகையில் உலகம் முழுவதுமாக உள்ள உள்ளூர் மரபுகளின் பயணம் என்பது அது நடைப்பயணமாக இருக்கலாம் அல்லது சைக்கிள் பயணமாக இருக்கலாம் இந்தப் பயணங்கள் உரிய இடங்களை அடைவதற்கானவை மட்டுமல்ல. அவைதாண்டி ஒரு சமூக ஊடாட்டத்திற்குரியதாகவும் அமைகின்றது. றியாஸ் அகமட் அவர்கள் மேற்படி செயற்பாட்டிற்கு மேலுமொரு பரிமாணத்தை வழங்கியிருக்கின்றார். இது சமூக வலுவாக்கத்திற்கான சமுதாயக் கல்விமுறையாக ஆகியிருக்கின்றது.

அதாவது மரபார்ந்த அல்லது உள்ளூர் கற்கை முறைகளினுடைய மிகவும் ஆக்கபூர்வமான புதியவற்றை உருவாக்குவதற்கான, உருவாக்குபவற்றை அடுத்த கட்டம் விருத்தி செய்வதற்கான ஒரு கற்றல் செயற்பாட்டின் சமகால வடிவமாக உருப்பெற்றிருக்கின்றது.
எங்களது ஒவ்வொரு வீடுகளிலும் இருக்கின்ற அம்மாமார் சமையல் அறிவை எவ்வாறு கற்றுக் கொள்கிறார்கள்? அக்கம்பக்கம் உள்ளவர்கள், தூரத்தில் இருப்பவர்களுடன் புதிய புதிய விடயங்களை அறிந்து கொண்டு எவ்வாறு அவர்கள் தேர்ந்த சமையல்காரர் ஆகின்றார்கள்? ஒரு தேர்ந்த கைமருத்துவர்களாகியிருக்கின்றார்கள்? என்பதும் இந்த முறைகளை நாங்கள் விளங்கிக் கொள்வதும் அதற்கான மதிப்பீடுகளை உருவாக்கிக் கொள்வதும் மிகமுக்கியமாகும்.

உதாரணமாக கூத்து சார்ந்து பார்க்கும் போது ஒரு அண்ணாவியராக வருபவர் என்பவர் அவர் சிறுவனாக இருக்கும் பொழுதே விளையாட்டுக்கூடாக பின்பு சிறுசிறு கூத்துக்களை விளையாடுவதனூடாக அவருடைய சொந்த தேடல், திறன், வெளிப்பாடு, கற்றல், சிந்தனை, படைப்பாற்றல் என்பவற்றை அவர் எவ்வாறு தன்னிலிருந்தும் தன் முன்னோர்களில் இருந்தும், புறச்சூழலில் இருந்தும் பெற்றுக் கொண்டு அண்ணாவியாருக்குரிய தகுதிப்பாடுகளுடன் கூடிய ஆளுமையாக தன்னை வளர்த்துக் கொள்ளும் பொழுது அந்தச் சமூகம் அவரை அண்ணாவியராக ஏற்றுக்கொள்கின்றது. இங்கு எந்தவொரு அதிகார நிறுவனமும் அண்ணாவியார் என்று பட்டம் கொடுப்பதில்லை அத்தகைய பட்டங்கள் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுவதும் இல்லை.

மரபார்ந்த அல்லது உள்ளூர் கற்கை முறைகளில் அவர்களின் செயற்பாட்டுத் திறன்களின் ஊடாக அவர்களுடைய நிபுணத்துவம், தனித்துவம் என்பன கவனத்தில் கொள்ளப்படுகின்றன. இவை எல்லாவற்றுக்கும் மேலாக அறிவுருவாக்கம் என்பது புத்தி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அதனுடன் இணைந்த உள்ளார்ந்த உணர்வு, உள்ளுணர்வு சம்பந்தப்பட்ட விடயம் என்பதும் உலகம் தழுவிய இந்த உள்ளூர் அறிதல் மரபுகளில் நாங்கள் கவனித்துக் கொள்ள வேண்டிய விடயம.; இந்த அம்சம் காலனியம் அறிமுகப்படுத்திய நவீன கல்வி முறையில் முற்றாக நீக்கப்பட்டிருக்கின்றது. இதனை மூடநம்பிக்கைகள் என நம்பவைத்து நிராகரிக்க வைத்திருக்கின்றார்கள். இதுதான் காலனியத்தின் வெற்றி.

எனவே நாங்கள் எங்களது சிந்தனைக்கூடாக எங்களுக்கான எங்கள் சூழல் சார்ந்த ஒரு கல்வி முறையை சிந்திப்பதும், ஏற்படுத்துவதும்; நாங்கள் எங்களில் தங்கிநிற்கின்ற சமூகங்களாக உருவாகுவதற்கு அடிப்படையானவையாகும்.
எங்களைக் கட்டுப்படுத்துவதற்கான கல்விமுறைகளின் ஊடாக நாங்கள் எங்களுடைய விடுதலையை, தன்னிறைவை பெற்றுக்கொள்வது என்பது எந்தளவிற்கு அறிவின் பாற்பட்டது என்பது எல்லோரும் சிந்திக்க வேண்டிய விடயமாக இருக்கிறது. ஆனால் நிலைமை இந்நிலையில் எதிர்மாறானதாகவே இருக்கிறது. மாற்றத்திற்குரியதாகவும், கொண்டாடற்குரியதாகவும் இருக்கின்றது.

எங்களது அறிதல், உள்ளார்ந்த அறிதல்களுக்கூடாக பகிர்தல், செயற்படுதல், ஆற்றுதல், ஆற்றுப்படுத்தல் என்ற விடயங்களின் அம்சமே றியாஸ் அகமட் அவர்களினுடைய இந்த சைக்கிள் பயணம்.

இந்தப் பயணம் பல அறியப்படாத அறிவை பொது வெளிக்குக் கொண்டு வந்திருக்கின்றது. அதன் காரண காரியங்களை உரையாட வைத்திருக்கின்றது, அது பற்றிய பல்வேறு இடங்களில் உள்ள அறிவுகளை, கேள்விகளை பகிரவைத்திருக்கின்றது. செயல்நிலையையும் அதற்கான பங்கேற்பையும் நிகழ வைத்திருக்கின்றது.

இவற்றினூடாக இன்றைய எமது நிலைமைகளை புரிந்துகொண்டு எவ்வாறு நாங்கள் மாற்றங்கள் பற்றி சிந்திப்பது எவ்வாறு செயல்நிலைக்குக் கொண்டு வருவது, செயற்படுவதன் ஊடாகத்தான் நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.
இந்தவகையில் நாங்கள் எங்களுக்கான ஒரு நிகழ்கால, எதிர்கால கல்விமுறையின் உருவாக்கத்திற்கான ஒரு மாதிரியாக றியாஸ் அகமட் அவர்களினுடைய இந்த சைக்கிள் பயணம் அமைந்திருக்கின்றது.

அதன் பதிவான இந்த நூல் என்பது இத்தகைய சமாந்தரக் கல்வி முறையை விளங்கிக்கொள்ளுகின்ற முன்னெடுக்கின்ற ஒரு கைநூலாக அமைந்து நிகழ்காலத்திற்கும், எதிர்காலத்திற்குமான சிந்தனை மாற்றத்திற்கும் செயற்பாட்டுத் தூண்டலுக்கும் ஆற்றுப்படுத்துகின்ற கைநூலாக அமைந்திருக்கின்றது.

எதுவுமற்றது போலத் தோற்றமளிக்கின்ற சூழலுக்குள் றியாஸ் அகமட் அவர்களை இட்டுச் சென்று அவரது வாழ்வுக்கும், அதன் மூலமான இந்நூலுக்கும் வழியாக அமைந்தது பற்றி அவரது முன்னுரையின் நான்காம் பக்க இரண்டாம் பந்தி சுருக்கமாகவும் செறிவாகவும் விளக்குகின்றது.

“ இந்த மிதி வண்டி ஓட்டம் பல கதவுகளைத் திறந்துவிட்டது. அக்கம் பக்கத்திலும், இந்த மாவட்டத்திலும், அடுத்த மாவட்டங்களிலுமுள்ள இதுவரை சென்று பார்க்காத, கேட்காத, கேள்விப்படாத சூழலியல், புவியியல், கலாசார, பண்பாட்டு, வரலாற்று, பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்களுக்கு செல்வதற்கு முடிந்தது. காடுகளுக்கும், மனித நடமாட்டமே இல்லாத இடங்களுக்கும் கூட செல்ல நேர்ந்தது. அந்தந்த இடங்களில் இருந்த மக்களின் கலாசாரம், மொழி, பண்பாடு, உணவு, பழக்கவழக்கங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இது சிந்தனைத் தெளிவையும், மாற்றத்தையும், விரிந்த பார்வைiயும் ஏற்படுத்தியது. கழகத்தில் இணைந்துகொள்ளுவதற்கு முன்பு சகல தேவைளுக்குமாக எனது ஒரு நாளின் முழுப் பகுதியையும் ஏற்கனவே ஆக்கிரமித்து வைத்திருந்த மிதிவண்டி, கழகத்தில் சேர்ந்து ஓடத் தொடங்கியபோது. அருகிலுள்ள நகரங்கள், உறவினர் வீடுகள், விழாக்கள், பணிகள், பொழுதுபோக்குகள் என மேலதிக பல விடயங்களுக்கும் மிதிவண்டியையே என்னை பாவிக்கச் செய்தது”.

றியாஸ் அகமட் அவர்கள் கவனத்திற்குரிய பல்துறை ஆளுமை. அவருடைய கற்பனை, சிந்தனை, படைப்பாற்றல், செயற்பாட்டுத்திறன், மதிப்பீட்டுத்திறன் என்பதை மனிதரதும், எல்லா உயிர்களதும் இயற்கைச் சூழலினதும், அழகானதும் வளமானதுமான வாழ்தலை மையப்படுத்தியது.

அவரது எழுத்துக்கள் இலக்கிய வளமும், அறிவியல் குணமும் நிறைந்தவை. அவரது சிறுகதைகளையும், அவரது கட்டுரைகளையும் வாசிப்பவர்கள் மேற்படி இரு இயல்புகள் கலந்ததுமான அனுபவத்தையும், அறிவையும் பெற்றுக்கொள்ள முடியும்.
றியாஸ் அகமட் போன்ற ஆளுமைகளின் பெருக்கமும், அறிவுருவாக்கத்தில் அவர்களது பங்கும், பணியும் முதன்மைப்படுத்தப்படுவதிலேயே சமூகங்களின் ஆக்கபூர்வமான வளர்ச்சி சாத்தியமாகும். தேசங்களில் தன்னிறைவும் எட்டப்படும். இதற்கான உயர்கல்வி, உயர்கல்விச் சூழல் உருவாக்கல் அடிப்படையான தேவையாகும். சுமாந்தரக் கல்வி முறைகளாக எங்களது சூழலில நாங்களே உருவாக்குவோம். றியாஸ் அகமட் அவர்களின் சைக்கிள் பயணம் இத்தகையதான பல்வகைப் பயணங்களின் ஒரு வகை. குறிப்பிட்டுச் சொல்லும்படி அமையும் ஒரு வகை. அவருடன் பயணிப்போம். சுமாந்தரமான பல்வகைப்பட்ட கல்விமுறைகளை உருவாக்குவோம். வாழ்வோம். வாழ்வாங்கு வாழ்வோம்.

ஏனெனில் எங்களது வளர்ச்சி எங்களது அறிவுருவாக்கங்களால் ஏற்படுவது. ஏங்களது அறிவுருவாக்கங்கள் எங்களது சூழல்சார்ந்த செயல்மையச் சிந்தனைகளால் உருவாக்கப்படுவது. எங்களது சிந்தனைகளும், செயற்பாடுகளும் எங்களுக்குச் சமாந்தரமான உலகுதழுவிய சிந்தனைகளால் வளப்படுத்தப்பட்டவை ஆகும்.

பேராசிரியர் சி.ஜெயசங்கர்
நுண்கலைத்துறை பிரிவு
இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம்
வந்தாறுமூலை, இலங்கை

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More