எங்களது கூட்டுறவு பலவீனம் அடைவதற்கு போர் காரணமாக இருந்தாலும் போரின் பின்னரும் அவர்களால் முன்னைய நிலைமைக்கு வரமுடியவில்லை. இதில் விதிவிலக்காக பனை – தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்படுகின்றன. அவர்கள் இப்போதும் சிறப்பாகவும் ஆக்பூர்வமாகவும் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்
நான் மாவட்டச் செயலராகப் பணியாற்றிய காலங்களில் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாக பல்வேறு உபகரணங்களைப் பெற்றுக்கொடுத்திருக்கின்றேன். அரிசி ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்முயற்சிக்கான வளங்களைப் பெற்றுக் கொடுத்திருக்கின்றேன். ஆனால் அவர்கள் அதனைப் பயன்படுத்தி தங்களை முன்னேற்றவில்லை. மாறாக தவறான முகாமைத்துவம் காரணமாக அவை மூடப்படவேண்டிய நிலைமைக்குத்தான் வந்திருக்கின்றன. அந்த உபகரணங்களை பூட்டி வைத்திருந்தார்கள். தலைமைத்துவங்கள் சரியாக அமையாததால் இந்த நிலைமை ஏற்பட்டது.
கடந்த காலங்களில் அரசாங்கம் கர்ப்பிணிகளுக்கான உணவுப் பொருட்களை வழங்கியிருந்தது. இதனை பல நோக்குக் கூட்டுறவுச் சங்கள் ஊடாகவும் வழங்க நான் நடவடிக்கை எடுத்திருந்தேன். சில சங்களால் அவற்றை வெற்றிகரமாகச் செய்ய முடிந்தது. சில சங்களால் அது முடியாமல் போனது. பொறிமுறை சரியாக இருந்தாலும் தலைமைத்துவம் ஒழுங்காக இல்லை என்றால் இப்படித்தான் நடைபெறும்.
கூட்டுறவின் அடிநாதமே சேர்ந்து செயற்படுவதுதான். ஆனால் இப்போது கூட்டுறவில் சேர்ந்தாலும் தனிப்பட்ட ரீதியில் தாங்கள் என்ன இலாபத்தைப் பெற்றுக்கொள்ளலாம் என்ற நோக்கத்தில்தான் செயற்படுகின்றனர். இதனால்தான் கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்த முடியாமல் இருக்கின்றது.
கூட்டுறவுத்துறைக்கு இளையோர் அதிகளவில் வரவேண்டும் என்று விரும்புவதற்குக் காரணம் இருக்கின்றது. அவர்கள் புத்தாக்கமாக சிந்திப்பவர்கள். அத்துடன் துணிவுடன் – வேகமாக செயலாற்றுவார்கள். அவர்களால்தான் மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.
அரிசி மாபியாவைக் கட்டுப்படுத்துவதற்காக, கூட்டுறவு அபிவிருத்தி வங்கி ஊடாக நெல் கொள்வனவுக்கு நாம் கடன்களை வழங்குகின்றோம். நெல்லுக்கான நிர்ணய விலையை விட கூடுதலான விலைக்கு விவசாயிகளிடமிருந்து வேறு மாகாண தனியார் அரிசி ஆலை உரிமையாளர்கள் நெல்லைக் கொள்வனவு செய்கின்றார்கள். விவசாயிகளும் தமக்கு கூடுதலான இலாபம் கிடைக்கின்றது என விற்பனை செய்கின்றார்கள்.
இவ்வளவு வலிமையான கூட்டுறவுத்துறையை மீண்டும் வளர்த்தெடுப்பதற்கு தலைமைத்துவப் பண்புள்ள இளையோர் அதிகளவில் இணைந்துகொள்ளவேண்டும். இங்கு வடக்கு, கிழக்கு, மலையகத்தைச் சேர்ந்த இளையோர் இணைந்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நீங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு கூட்டுறவுத்துறையைப் பலப்படுத்த வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

