Home இலங்கையாழ் . மாநகர முதல்வர் யார் ? கபிலனும் களத்தில்

யாழ் . மாநகர முதல்வர் யார் ? கபிலனும் களத்தில்

by admin

 

யாழ் மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவில் தேசிய மக்கள் சக்தியும் போட்டியில் களமிறங்கவுள்ளனர். யாழ் மாநகர சபையின் முதல்வரை தெரிவு செய்வதற்கான கூட்டம் நாளையதினம் வெள்ளிக்கிழமை காலை யாழ் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

யாழ் மாநகர சபை 45 உறுப்பினர்களை கொண்ட சபையாகும். அதனால் 23 ஆசனங்களை வைத்திருக்கும் கட்சியே ஆட்சியை அமைக்க முடியும். இம்முறை எந்தவொரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மையை கொண்டிருக்காத நிலையில் கட்சிகள் கூட்டுக்களை அமைத்து ஆட்சியை அமைக்கவுள்ளது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சி 13 ஆசனங்களையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 12 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 10 ஆசனங்களையும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகியன தலா 4 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன தலா ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியது.

அதில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகள் யாழ் மாநகர சபையின் முதல்வர் பதவிக்காக போட்டியிடவுள்ளது. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பில் முதல்வர் பதவிக்கு விவேகானந்தராஜா மதிவதனியின் பெயரையும் பிரதி முதல்வர் பதவிக்கு இம்மானுவேல் தயாளனின் பெயரையும் பரிந்துரைக்க கட்சி தீர்மானித்துள்ளது.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆதரிக்கும். அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் முதல்வர் பதவிக்கு கனகையா ஶ்ரீ கிருஷ்ணாவும் பிரதி முதல்வர் பதவிக்கு துரைராஜா ஈசனும் பரிந்துரைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளனர்.

தேசிய மக்கள் சக்தியின் சார்பில் முதல்வர் பதவிக்கு சுந்தரமூர்த்தி கபிலன் போட்டியிடுவார் என அக்கட்சியின் யாழ் மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினரும் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் முதல்வர் வேட்பாளருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியன ஆதரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More