Home இலங்கைகூட்டுறவுத்துறை பின்னடைவைச் சந்தித்துள்ளது!

கூட்டுறவுத்துறை பின்னடைவைச் சந்தித்துள்ளது!

by admin

வடக்கு மாகாணத்தில் நிலைத்து நிற்கக் கூடிய கூட்டுறவு அபிவிருத்திக்காக உற்பத்தி கூட்டுறவை வளப்படுத்தும் – உருவாக்கும் நோக்கிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாந்த ஜயரட்ன ஆகியோரின் பங்கேற்புடன் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை (12.06.25) நடைபெற்றது.

வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளர் பொ.வாகீசனின் வரவேற்புரையுடன் கலந்துரையாடல் ஆரம்பமானது.

ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர்,

இலங்கையிலேயே வடக்கு மாகாணத்தின் கூட்டுறவுத்துறைதான் 1970 – 1980 ஆம் ஆண்டுகளில் கோலோச்சியது. காலப்போக்கில் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின்னடைவைச் சந்தித்தது. இன்று கூட்டுறவுத்துறை இயலுமை குறைந்துள்ளதாக மாறியுள்ளது.

அன்றைய காலத்தில் வடக்கிலிருந்து விவசாய உற்பத்திப் பொருட்களை தென்னிலங்கை எடுத்துச் சென்று அங்கிருந்து இங்குள்ள மக்களுக்கான நுகர்வுப் பொருட்களை எடுத்து வந்து கூட்டுறவுச் சங்கங்கள் விற்பனை செய்தன. ஆனால் இன்று தனியாருடன் கூட்டுறவுத்துறை போட்டியிட முடியாத நிலைமை உள்ளது.

காலத்துக்கு ஏற்றவகையில் உத்திகளைப் பின்பற்றினால் மாத்திரமே கூட்டுறவுத்துறையால் மீண்டெழ முடியும், என்றார்.

இதன் பின்னர் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் தனது உரையில்,

எமது அரசாங்கம் கூட்டுறவுத்துறையை வலுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் கூட்டுறவுத்துறை பின்னடைவைச் சந்தித்துத்தான் உள்ளது.

தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடான வியாபாரம் மற்றும் கிராமிய வங்கிகள் ஊடான கடன் வழங்கல் என கூட்டுறவின் செயற்பாடுகள் சுருங்கிவிட்டன. கூட்டுறவு பின்தங்கிய மக்களின் அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றும் ஒன்றாக மாறவேண்டும்.

கடந்த காலங்களில் கூட்டுறவுத்துறையை அரசியல்வாதிகள் கையாண்டிருந்தனர். கூட்டுறவுத்துறையின் சொத்துக்கள், இயக்குநர் சபைகளில் இருப்பவர்களால் தனிப்பட்ட தேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தன.

கணக்காய்வும் உரிய காலத்தில் நடத்தப்பட்டிருக்கவில்லை. இவை எல்லாம் பின்னடைவுக்கு காரணமாகியுள்ளன. அத்துடன் கூட்டுறவு துணைவிதிகளில் தற்போதைய காலத்துக்கு ஏற்ப மாற்றங்களும் செய்யப்பட வேண்டும், என்றார் பிரதி அமைச்சர்.

தொடர்ந்து ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாந்த ஜயரட்ன தெரிவிக்கையில்,

நிலைத்து நிற்கக் கூடிய கூட்டுறவு அபிவிருத்திக்காக உற்பத்தி கூட்டுறவை வளப்படுத்தும் – உருவாக்கும் செயற்றிட்டம் தொடர்பில் விளக்கமளித்தார்.

உற்பத்திக் கூட்டுறவுக்கான காப்புறுதி தொடர்பில் பணிப்பாளரால் தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது. இறுதியாக தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அதன் பணிப்பாளரால் தெரியப்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளால் சில பிரச்சினைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அது தொடர்பில் ஜனாதிபதியின் சிரேஷ;ட ஆலோசகர் மற்றும் பிரதி அமைச்சரால் தெளிவுபடுத்தல்களும் வழங்கப்பட்டன.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் கூட்டுறவு உதவி ஆணையாளர்கள், கூட்டுறவுச் சங்கங்கள், சமாசங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More