யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் திங்கட்கிழமை 07 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. செம்மணி பகுதியில் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 01” மற்றும் “தடயவியல் அகழ்வாய்வுத்தளம் இல – 02” என நீதிமன்றினால் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
மனிதப்புதைகுழி தொடர்பான விசாரணைகள் இதுவரை யாழ்ப்பாணம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், காவல்துறைமா அதிபரின் உத்தரவுக்கு அமைய, இந்த விசாரணைகளை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் ஒப்படைக்கபட்டுள்ள நிலையிலையே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அகழ்வு இடம்பெறும் இடத்தில் பிரச்சன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.





