Home இலங்கையாழ். பல்கலையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற மூவர்.

யாழ். பல்கலையில் பேராசிரியர்களாக பதவி உயர்வு பெற்ற மூவர்.

by admin

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். மருத்துவ பீடத்தின் ஓட்டுண்ணியல் துறை, சத்திரசிகிச்சையியல் துறை, சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறை ஆகிய துறைகளைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர்கள் மூன்று பேரை பேராசிரியர்களாகப் பதவி உயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை நேற்றைய தினம் சனிக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டம் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் நடைபெற்றது. அதன் போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய, திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்த ஓட்டுண்ணியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ. முருகானந்தன், சமுதாய மற்றும் குடும்ப மருத்துவத்துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எஸ். குமரன் மற்றும் சத்திரசிகிச்சையியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எஸ். கோபிசங்கர் ஆகியோரின் விண்ணப்ப மதிப்பீடு மற்றும் நேர்முகத் தேர்வு முடிவுகள் என்பன பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அவற்றின் அடிப்படையில், கலாநிதி ஏ. முருகானந்தன் ஓட்டுண்ணியலில் பேராசிரியராகவும், கலாநிதி எஸ். குமரன் குடும்ப மருத்துவத்தில் பேராசிரியராகவும், கலாநிதி எஸ். கோபிசங்கர் சத்திரசிகிச்சையியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More