Home இலங்கைஇனிய பாரதியின் நெருங்கிய சகா “தொப்பி மனாப்” கைது!

இனிய பாரதியின் நெருங்கிய சகா “தொப்பி மனாப்” கைது!

by admin

இனிய பாரதியின் சகாவான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் திருக்கோவில் பிரசே சபை முன்னாள் உறுப்பினரான சி.விக்கினேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை (27.7.25) மாலை குற்றப் புலனாய்வாளர்களினால் கைது செய்யப்பட்டார்.

அதேவேளை, அம்பாறை மாவட்டத்தின் சில பகுதிகளில் கடந்த காலத்தில் இனியபாரதி தலைமையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினரால் இயங்கி வந்த முகாம்கள் மற்றும் மயானங்களில் இரண்டு தினங்களாக குற்றப் புலனாய்வாளர்கள் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அம்பாறை திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போணோர், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்கள் நடத்துதல், மிரட்டி பணம் பறித்தல் போன்ற சம்பவங்களுடன் தொடர்புடைய ரி.எம்.வி.பி. கட்சியைச் சேர்ந்த இனியபாரதி என அழைக்கப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் மற்றும் அவரது சகாவான சசீந்திரன் தவசீலன் ஆகியோரை கடந்த 6 ஆம் திகதி திருக்கோவில் மற்றும் சந்திவெளி பகுதிகளில் வைத்து குற்றப் புலனாய்வாளர்கள் கைது செய்திருந்தனர்.

இந்த கைதையடுத்து இனியபாரதி யின் முன்னாள் சாரதியான செந்தூரன் கடந்த 9ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்தைச் செலுத்திச் சென்ற போது அவரை கல்முனை நகரில் வைத்து குற்றப் புலனாய்வாளர்கள் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் சனிக்கிழமை (26.07.25) பிற்பகல் 2 மணிக்கு கொழும்பில் இருந்து வந்த குற்றப் புலனாய்வாளர்கள் தம்பிலுவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் பாடசாலை வீதியில் 2004 ஆம் ஆண்டு தொடக்கம் இயங்கி வந்த இனியபாரதி யின் காரியாலயத்தை முற்றுகையிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.

இவ்வாறு தம்பிலுவில் பிரதான வீதியில் இயங்கி வந்த ரி.எம்.வி.பி. முகாம், தம்பட்டையில் இயங்கி வந்த முகாம், திருக்கோவில் மயானம் போன்றவற்றுக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். கல்முனை தலைமையக காவல் பிரிவில் அமைந்துள்ள தாளவெட்டுவான் சந்திக்கு அருகாமையில் உள்ள வீட்டில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்களை வெள்ளை நிற ஆடை அணிந்து இரண்டு வெவ்வேறு ஜீப்களில் அழைத்து சென்று  சோதனை செய்தனர்.

இதன் பின்னர் சம்மாந்துறையில் செயற்பட்ட முகாம் உட்பட அந்த கால பகுதியில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்களில் ரி.எம்.வி.பி. முகாம்களாக செயற்பட்ட இடங்களுக்கு சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டு, அங்கு சந்தேகத்துக்கு இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளின் நிலத்தைத் தோண்டி சோதனையிடுவ தற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவ தற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியை சேர்ந்த இனிய பாரதியின் மற்றும் ஒரு சகாவான திருக்கோவில் விநாயக புரத்தைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான தொப்பி மனாப் என்றழைக்கப்படும் சின்னத்தம்பி விக்கினேஸ்வரன் அவரது வீட்டில் வைத்து ஞாயிற்றுக்கிழமை (27.07.25) மாலை குற்றப் புலனாய்வாளர்கள் கைது செய்து கொழும்புக்கு விசாரணைக்காக கொண்டு அழைத்துச் சென்றுள்ளதாக காவற்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை குற்றப் புலனாய்வுத்துறையின் கொலை மற்றும் ஒழுங்கு அமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு. 2005 மற்றும் 2008 க்கு இடையில் கிழக்கு மாகாணத்தில் நடந்த கொலைகள், கடத்தல்கள், காணாமல் போதல்கள், துப்பாக்கிகளைப் பயன்படுத்துதல், சித்திரவதைக் கூடங்களை நடத்துதல் மற்றும் மிரட்டி பணம் பறித்தல் குறித்து நீண்ட விசாரணையை மேற்கொண்டது.

இந்த விசாரணையில், முதல் சந்தேக நபரான இனியபாரதி 2004 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து வெளியேறிய கருணா அம்மான் பிரிவின் திருக்கோவில் பகுதியில் உள்ள ஆயுதமேந்திய முகாமின் தலைவராக பணியாற்றியவர்.

இவர் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் கருணா அம்மான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அரசியல் கட்சி யின் அம்பாறை மாவட்ட ஜனாதிபதி ஒருங்கிணைப்பு அதிகாரியாக பணியாற்றியவர் என்பதுடன் 2012 முதல் 2015 வரை அந்தப் பிரிவு பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினராகவும் பணியாற்றியபோது பல படுகொலை மற்றும் ஆட்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளார் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More