Home இலங்கைமன்னார் மாவட்ட மக்களுக்கு அநுரகுமார  வழங்கிய வாக்குறுதி?

மன்னார் மாவட்ட மக்களுக்கு அநுரகுமார  வழங்கிய வாக்குறுதி?

by admin
ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க  தனது உரையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய காற்றாலை திட்டம் மன்னாரில் நடை முறைப்படுத்தப்படாது என்கிற  விடையத்தை கூறி இருந்த நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற குறித்த திட்டம் நம்பிய மக்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.
மன்னாரில் சுற்றுச் சூழலுக்கும்  மக்களது இயல்பு வாழ்க்கைக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் காற்றாலை திட்டத்தை நிறுத்த வலியுறுத்தி மக்களும் சிவில் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுக்கும்  போராட்டம் இன்று  செவ்வாய்க்கிழமை (5) இரவு மன்னார் தள்ளாடி பகுதியில்  அமைதியாக முன்னெடுத்து வரும்  நிலையில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

மன்னார் மாவட்டத்தில் மக்களின் வாழ்வியலையும், இயற்கைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் குறித்த திட்டத்தை மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்க வேண்டாம் என மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் மக்களினுடைய கருத்தை கருத்தில் கொள்ளாது மன்னார் தீவில் 2 ஆம் கட்ட காற்றாலை திட்டத்தை முன்னெடுக்கும் வகையில் பாரிய காற்றாடிகள் மன்னாரை நோக்கி எடுத்து வரப்பட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில்,மக்கள் அதனை அறித்து தற்போது இரவு பகல் பாராது வீதியில் இறங்கி போராடி வருகின்றனர்.
ஏற்கனவே ஒரு சில வருடங்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ஷ் பதவியில் இருந்த போது மன்னாரின் சில பகுதிகளில் காற்றாலைகள் நிர்மானிக்கப்பட்ட நிலையில் சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
அதன் பிற்பாடு  அடுத்த கட்டமாக காற்றாலைகள் நிர்மானிக்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்ட போது மக்கள் அதனை முற்று முழுதாக எதிர்த்து இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலின் போது வேட்பாளராக மன்னார் மாவட்டத்திற்கு வருகை தந்த அநுரகுமார திஸாநாயக்க மக்களினால் குறித்த பிரச்சினை அவருடைய கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,தனது உரையில் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய இந்த காற்றாலை திட்டம் மன்னாரிலே நடை முறைப் படுத்தப்படாது என்கிற விடையத்தை கூறி இருக்கிறார்.
மன்னார் மாவட்ட மக்கள் அவரது கருத்தில் நம்பிக்கை கொண்டு இருந்தார்கள்.ஆனால் இன்று அவர் அறுதி பெரும்பான்மை ஆசனங்களை பெற்று ஜனாதிபதியாகவும் இருந்து கொண்டு பாராளுமன்றத்திலும் அறுதி பெரும்பான்மை யாக இருக்கும் நிலையிலே இன்று மன்னாரில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப் படுகின்ற நிலையில் இதனை நடைமுறைப்படுத்தாமல் இருப்பதற்கு மக்களினால் எடுக்கப்படுகின்ற அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துள்ள நிலையிலே மக்களின் விருப்பத்திற்கு மாறாக காற்றாலைகள் எடுத்து வரப்படுகின்ற நிலையில் மக்கள் வழிமறித்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி,தமிழ் தேசிய பேரவை முழுமையான ஆதரவை வழங்கும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More