Home உலகம்பிரான்சிலும் மக்கள் போராட்டம் வெடித்தது!

பிரான்சிலும் மக்கள் போராட்டம் வெடித்தது!

by admin

பிரான்ஸ் நாட்டில் அரசு கொண்டு வந்த சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

போராட்டக்கார்கள் சுமார் 200 பேரை காவற்துறையினர்  கைது செய்துள்ளனர்.

“அனைத்தையும் முடக்குங்கள்” என்ற கோஷத்துடன் ஒன்லைனில் முன்னெடுக்கப்பட்ட பிரசாரத்தின் தொடர்ச்சியாக, இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

சாலைகளில் மறியல் செய்ததும், பொதுச் சொத்துகளுக்கு தீ வைத்ததாலும் போராட்ட இடம் வன்முறை களம் போல காட்சியளித்தது. காவற்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்கார்களை விரட்டியடித்தனர்.

இது தொடர்பாக பிரான்ஸ் உள்துறை அமைச்சர் புருனே ரிடேல்லே கூறுகையில், ரென்னேஸ் நகரில் பேருந்துக்கு தீ வைக்கப்பட்டது. தென்மேற்கு பகுதியில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பவர் லைன் சேதப்படுத்தப்பட்டதால் ரயில்கள் இயங்க வழியில்லை. கிளர்ச்சி போன்ற சூழலை உருவாக்க போராட்டக்காரர்கள் முயற்சிக்கிறார்கள்.

பிரான்ஸ் முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், நாடு முழுக்க 80,000 காவற்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் போலீசார் தடுப்புகள் வைத்துள்ளனர். இதனையும் மீறி, பிரான்சில் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

பிரான்சில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகவே அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. பிரதமர் பிரான்சுவா பாயுரோவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதில் பிரதமர் தோல்வி அடைந்தார். நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி அடைந்ததால் தனது பதவியை பிரதமர் பிரான்சுவா ராஜினாமா செய்தார்.

பிரான்சில் செலவினக் குறைப்பு நடவடிக்கையாக, பொது விடுமுறை நாட்களை குறைப்பது, பென்ஷன்களை முடக்கி வைப்பது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்தே பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

பிரதமர் பிரான்சுவா தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து மாற்று ஏற்பாடாக, ஜனாதிபதி  இமானுவேல் மேக்ரான் பாதுகாப்புத் துறை அமைச்சர் செபஸ்டியன் லெகோர்னுவை புதிய பிரதமராக நியமித்தார்.

கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 4 புதிய பிரதமர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. புதிய புதிய பிரதமர்கள் நியமனம் செய்வதற்கும், அரசின் செலவுகளை சிக்கனமாக செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில், சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் கொந்தளித்த இளைஞர்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தால் நேபாள நாட்டில் வன்முறை கட்டுக்கடங்காமல் ஏற்பட்டுள்ளது. பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். நாட்டின் அரசு அலுவலகங்கள், முக்கிய பிரமுகர்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.

இதையடுத்து உள்நாட்டு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை ராணுவம் ஏற்றது. இதனால் கடந்த இரு தினங்களுக்கும் மேலாக வன்முறைக் களமாக இருந்த நேபாளம், படிப்படியாக இயல்பு நிலையை நோக்கி திரும்பி வருகிறது. எனினும், அங்கு இன்னும் பதற்றமான சூழல் நீடிக்கிறது. நேபாளப் போராட்டம் போலவே, பிரான்சிலும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More