தியாக தீபம் திலீபனின் 38ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில், தியாக தீபத்தின் உயிர் பிரிந்த நேரமான காலை 10.48 மணிக்கு, பொதுச்சுடர் ஏற்றப்பட்டது. அதனை தொடர்ந்து தியாக தீபத்தின் உருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேவேளை சம நேரத்தில் நல்லூர் வடக்கு வீதியில் திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திலும் , நினைவிடத்திற்கு அருகில் உள்ள திலீபனின் ஆவண கண்காட்சி கூடத்திலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி தியாக தீபம் திலீபன் ஐந்தம்ச கோரிக்கைகளை முன் வைத்து நல்லூர் ஆலய வீதியில் நீராகாரம் இன்றி உண்ணாவிரதம் இருந்தார். அவரது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் 12 நாட்களின் பின்னரான 26ஆம் திகதி அவரது உயிர் பிரிந்தது.
இதேவேளை யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்திலும் தியாக தீபம் தீலிபன் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றது. பல்கலைக்கழக வளாகத்தினுள் மதியம் 12 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டு , பொதுச் சுடர் ஏற்றப்பட்டு , தொடர்ந்த தியாக தீபம் திலீபனின் உருவப்படத்திற்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.










