Home இலங்கைமன்னாரில் மக்களை தாக்கிய காவற்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

மன்னாரில் மக்களை தாக்கிய காவற்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!

by admin

மன்னாரில் கற்றாலை திட்டத்திற்கு எதிராக அகிம்சை வழியில் போராடிய கத்தோலிக்க மதகுருக்கள் மற்றும் பொதுமக்கள் மீதான பொலிஸாரின் தாக்குதலுக்கு கண்டனம் தாக்கிய காவற்துறையினர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் மானிப்பாய்  பிரதேச சபை உறுப்பினர் ஜோன் ஜிப்பிரிக்கோ கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னார் தீவில் மேற்க்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை திட்டத்தை எதிர்த்து அமைதி வழியில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு  உறுதுணையாக செயற்பட்டு வரும் கத்தோலிக்க மதகுருக்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து அச்சுறுத்தும் நோக்குடன் திட்டமிட்ட ரீதியில் காவற்துறையினர் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அத்ததுடன்  இப்போராட்டத்தை குழப்பிட முனைந்து அமைதியான முறையில் தமது கருத்துக்களை வெளிப்படுத்த முயன்ற  பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியதை தடுக்க முயன்ற கத்தோலிக்க மதகுருக்களை தாக்கி தூக்கியெறிந்து அவர்களை அச்சுறுத்தியும் உள்ளனர்

இத் தாக்குதல் அரச இயந்திரத்தின் வன்முறை மற்றும் அத்துமீறலின் உச்சமாகும். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஜனநாயக விரோதச் செயலாகும்.

அரசாங்கமும், காவல்துறையும் தமிழ் மக்களின் உரிமைக்குரல்களை அடக்குவதற்கும், அச்சுறுத்துவதற்கும் எடுக்கும் முயற்சிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்.

மக்களோடு மக்களாக இணைந்து போராடிய மதத் தலைவர்கள் மீதான தாக்குதல்  அடிப்படை மனித உரிமைகள் மீதான அப்பட்டமான மீறலாகும். மக்களின் அமைதியான ஒன்றுகூடல் உரிமையும், பேச்சுச் சுதந்திரமும் இங்கு  மீறப்பட்டுள்ளது அவை பாதுகாக்கப்பட வேண்டும்.

மக்கள் போராட்டங்களால் ஆட்சிக்கு வந்த சனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்கள் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்தச் சம்பவத்தின் தீவிரம் உணர்ந்து உடனடியாகவும், பக்கச்சார்பற்ற விதத்திலும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று நாம் வலியுறுத்துகிறோம்.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் குரலுக்கு மதிப்பளித்து இந்த காற்றாலை திட்டத்தை நிறுத்த ஜனாதிபதி முன்வருவதுடன்  மன்னார் தீவில் வாழும் மக்களின் எதிர்காலமும், தொழில்களும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என ஊடங்களுக்கு அவர் அனுப்பியுள்ள செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More