Home இலங்கையாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன்

யாழ்ப்பாணத்தை சென்றடைந்த சூரன்

by admin

 

பிரான்சில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்து , சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் கடந்து இன்றைய தினம் புதன்கிழமை சூரன் என்ற  இளைஞன் யாழ்ப்பணத்தை சென்றடைந்துள்ளார்.

யாழ்ப்பாணம் நல்லூரை பூர்வீகமாகக் கொண்ட 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து மேலும் தெரிவிக்கையில் –

“நான் பாரிஸில் இருந்து கடந்த செப்டம்பர் 01ஆம் திகதி பயணத்தை ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் பயணித்து இன்று எனது பூர்வீக இடமான நல்லூரை வந்தடைத்தேன்.

யாழ்ப்பாணம் தனது பெற்றோரின் சொந்த ஊர் என்பதால் எனது பயணத்தின் இறுதி இலக்காக யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.

அத்துடன் இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட உன்னத உணர்வு. எனது நோக்கம் தனது குடும்பத்துடன் மீண்டும் இணைவது மட்டுமல்லாமல்ல யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆகும்.

மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப் பேணுகின்ற உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்குவதுமாகும்.

நான் பாகிஸ்தானுக்கும் சென்று வர முயற்சித்தேன். ஆனால் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது. அதன்பின் இந்தியா சென்று நாகப்பட்டினத்தில் இருந்து கப்பல் மூலம் காங்கேசன்துறையை வந்தடைந்து  எனது இறுதி நல்லூரை வந்தடைந்துள்ளேன்

இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றது. அத்துடன் நான் இந்த பயணத்தில் கரடுமுரடன சவால்களை எதிர்கொண்டாலும் அந்த நாடுகளின் அரசுகளும் மக்களும் எனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்புகளையும்  தந்திருந்தனர். அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன் என தெரிவித்திருந்தார்.

அதேநேரம் சுமார் 40 வருடங்களுகு முன்னர் பெற்றோர் பிரான்சில் குடியேறிய நிலையில் சூரன் சரளமாக தமிழில் தனது உணர்வுகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More