ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அடுத்த சேரன்கோட்டை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் பொருட்கள் கடத்த இருப்பதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ராமநாதபுரம் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி தலைமையில் கியூ பிரிவுகாவல்துறையினா் சேரான் கோட்டை கடற்கரை பகுதியை இன்று (2) அதிகாலை கண்காணித்தனர்.
அப்போது கோவை மாவட்டம் பதிவெண் கொண்ட சரக்கு வாகனத்தில் 12 அட்டைப் பெட்டிகளில் இருந்த 720 கொசு விரட்டும் பத்தி பெட்டிகளுடன் இருந்த வாகனத்தின் சாரதி உட்பட இருவர் கியூ பிரிவு காவல்துறையினரைக் கண்டதும் தப்பி ஓட முயன்ற போது இருவரையும் மடக்கி பிடித்து விசாரணை செய்துள்ளனர்.
விசாரணை செய்ததில் இலங்கைக்கு படகு மூலம் சட்டவிரோதமாக கடத்துவதற்காக 12 அட்டைப்பெட்டிகளில் கொசு விரட்டும் பத்திகளை கொண்டு வந்து கடற்கரை பகுதியில் பதுக்கி வைத்து, அரிச்சல் முனை அருகே கடலில் நிறுத்தி வைத்துள்ள பதிவு எண் இல்லாத படகு சேரான் கோட்டை கடற்கரை கொண்டு சென்று இலங்கைக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு இருந்தது தெரிய வந்தது.
12 அட்டைப் பெட்டிகளில் இருந்த கொசு விரட்டும் பத்திகள், சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து ராமேஸ்வரம் சுங்கத்துறையினர் இடம் கியூ பிரிவு காவல்துறையினா் ஒப்படைத்தனர்.




