ழ்ப்பாண மத்திய பேருந்து நிலையத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள கடைகளால் அங்கு இடம்பெறும் சட்டவிரோத செயல்கள் தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு வர்த்தக சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.
வர்த்தக சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கும் ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் வர்த்தக சங்கத்தால் பல்வேறு விடயங்கள் முன்வைக்கப்பட்டு அவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
யாழ்ப்பாணம் நவீன சந்தை கட்டடத் தொகுதியிலுள்ள பல கடைகளின் உரிமம் மாற்றம் தொடர்பான நடவடிக்கை கடந்த காலத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும் அது பெருமளவுக்கு நடைபெறவில்லை என சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் கவனமெடுத்து விசேடமாக ஆளணியை நியமித்து விரைவாக நிறைவுசெய்வதற்குரிய ஒழுங்குகளை முன்னெடுக்குமாறு யாழ். மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஆணையாளரை ஆளுநர் கோரினார்.
உரிமம் மாற்றத்தை செய்வதன் ஊடாக மாநகர சபைக்கான வருமானம் பல கோடி ரூபாக்கள் வரையில் கிடைக்கப்பெறும் என்பதையும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
அத்துடன் நவீன சந்தைக் கட்டடத் தொகுதியிலுள்ள மலசலகூடம் உள்ளிட்ட நகரப் பகுதியிலுள்ள மலசலகூடங்களின் சீர்கேடுகள் தொடர்பில் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் விசனம் வெளியிட்டனர். அவற்றை உரியமுறையில் சீர்செய்வதுடன் தொடர் பராமரிப்புக்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் கோரினார்.
யாழ். நகரின் முக்கிய இடங்களில் சிலைகளை வைப்பதன் அவசியத்தையும் இலங்கையில் ஏனைய நகரங்களில் அவ்வாறு சிலைகள் வைக்கப்பட்டு அவை உயிர்ப்புடன் எவ்வாறு உள்ளன என்பது தொடர்பிலும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் குறிப்பிட்டனர்.
பொருத்தமான இடங்களை அடையாளம் கண்டு சிலைகளை வைப்பதற்குரிய ஒழுங்குகளைச் செய்வதுடன், ஏற்கனவே வைக்கப்பட்டுள்ள சிலைகளை உயிரோட்டமாக தென்படக்கூடியவாறான வர்ணப்பூச்சு வேலைகளையும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கோரினார்.
யாழ்ப்பாண நகரிலுள்ள கழிவு வாய்க்கால்கள், குப்பைகள் தொடர்பிலும் பிரஸ்தாபிக்கப்பட்டது. அவற்றை துப்புரவு செய்வதற்கான முயற்சிகள் மாநகர சபை எடுத்துள்ள நிலையில் அதனை துரிதப்படுத்துமாறும் அதற்கான ஒழுங்குமுறைகளையும், தண்டங்களையும் அறிமுகப்படுத்துமாறும் வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். மாநகர சபையை அதனைச் செயற்படுத்துமாறு ஆளுநர் குறிப்பிட்டார்.

