Home இலங்கைமன்னார் மாவட்டத்தில்  பல கிராமங்கள்  நீரில் மூழ்கின.

மன்னார் மாவட்டத்தில்  பல கிராமங்கள்  நீரில் மூழ்கின.

by admin

தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மன்னார் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.தொடர்ச்சியாக காற்றுடன் மழை பெய்து வருகின்ற மையினால் மக்கள் இடம் பெயர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு மற்றும் மடு ஆகிய ஐந்து பிரதேசச் செயலாளர் பிரிவுகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவி பணிப்பாளர் கே.திலீபன்  தெரிவித்தார். மேலும் தொடர்ச்சியாக பெய்து வரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் உயர்ந்த நிலையில் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனடிப்படையில் மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் தற்போது 16.9 அடியாகவும் காணப்படுகின்றது .தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக வெள்ள நீர் மட்டம் அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில்,மடு ,நானாட்டான்,முசலி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாழ் நில கிராம அலுவலகர் பிரிவுகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் பாதிப்புகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு மையங்களுக்கு செல்லுமாறும் மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவி பணிப்பாளர் தெரிவித்தார்.

காற்றின் வேகம் தொடர்ச்சியாக உயர்வாக காணப்படுவதனால் கடற்கரை ஓரங்களில் உள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு,தேவன்பிட்டி,அந்தோனியார் புரம் ஆகிய கிராமங்கள் கடல் நீரினால் பாதிக்கப்பட்டுள்ளது. கிராம அலுவலர்கள் ஊடாக மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.மேலும் மாவட்டத்தில் உள்ள குளங்களின் நீர் மட்ட உயர்வு அதிகரித்து காணப்படுகிறது.

கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில்  முப்படையினர் ஈடு பட்டுள்ளதோடு,அனர்த்த முகாமைத்துவ நிலையம்,மாவட்ட செயலகத்துடன் இணைந்து துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை மன்னார் பிரதான பாலத்தில் வெள்ள நீர் காணப்படுவதனால் மன்னார் நகரில் இருந்து  அவசிய தேவை இன்றி பயணிப்பவர்களை இராணுவத்தினர் மன்னார் பிரதான பால நுழைவு பகுதியில் வைத்து திருப்பி அனுப்புகின்றனர்.
மன்னார் பகுதியில் கடற்கரையோரங்களில் நங்கூறமிடப்பட்ட மீன்பிடி படகுகள்,கடும் காற்று மற்றும் மழை காரணமாக வேறு பகுதியில் கரை ஒதுக்கி உள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளதோடு,மீனவர்கள் பாரிய பாதிப்பையும் எதிர்நோக்கி வருகின்றனர்.
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் காணப்படுவதால் மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More