Home இலங்கைஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்!

ஜனாதிபதியை சந்திக்க அனுமதி கோரியுள்ள வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர்!

by admin

 

இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி நடவடிக்கைகளால் வடக்கு மாகாண மீனவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பாதிப்புக்கள் தொடர்பாகவும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சந்தித்துக் கலந்துரையாடுவது குறித்தும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்குரிய மனு வடக்கு மாகாண ஆளுநரிடம் கையளிக்கப்பட்டது.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகள், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனை ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் புதன்கிழமை சந்தித்து இக்கோரிக்கைக் கடிதத்தைக் கையளித்தனர்.

பல்வேறு இடர்பாடுகளின் போதும் இந்திய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கி வருகின்ற உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோத இழுவைமடி மீன்பிடி முறையால் வடக்கு மாகாண மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல்வளம் என்பன எவ்வகையில் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்தும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்குத் தமக்குச் சந்தர்ப்பம் ஒன்றை ஏற்படுத்தித் தருமாறும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தினர் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தால் கையளிக்கப்பட்ட மனுவை ஏற்றுக்கொண்ட ஆளுநர், அதனை உடனடியாகவே ஜனாதிபதியின் கவனத்துக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More