223
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.
குறிப்பாக, தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவிற்காக அரச நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக லண்டனில் சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், வழக்கை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரணில் விக்கிரமசிங்கவின் லண்டன் பயணம் உத்தியோகபூர்வமானதா இல்லையா என்பதை ஆராய லண்டன் சென்ற சி.ஐ.டி (CID) அதிகாரிகள், அங்கு திரட்டிய ஆதாரங்களை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளனர். இந்த ஆதாரங்கள் வழக்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல போதுமானவை எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் தனித்துவத்தைக் கருத்தில் கொண்டு, இதனை மூவர் அடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு (Trial-at-Bar) முன்னிலையில் விசாரிக்குமாறு பிரதம நீதியரசரிடம் கோரிக்கை விடுக்க சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இலங்கையின் நீதித்துறை வரலாற்றில் முன்னாள் நிறைவேற்று ஜனாதிபதி ஒருவர் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவ்வாறான அமர்வில் நிறுத்தப்படுவது இதுவே முதல் முறையாக அமையும்.
கடந்த காலங்களில் சட்டமா அதிபரால் சர்ச்சைக்குரிய வகையில் மீளப் பெறப்பட்ட 6 வழக்குகளில், 4 வழக்குகளை மீண்டும் தாக்கல் செய்வது குறித்து சி.ஐ.டி மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற விசேட கலந்துரையாடல்களில் சி.ஐ.டி பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் உயர் காவற்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.
சட்டமா அதிபர் இந்த வழக்கில் தேவையற்ற தலையீடுகளைத் தவிர்க்க வேண்டும் எனவும் திணைக்கள மட்டத்தில் கோரிக்கைகள் எழுந்துள்ளதாகத் தெரிகிறது.
ஜனவரி 28 ஆம் திகதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.
Spread the love

