யாழ்ப்பாணம், எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் விக்கிரகங்கள் களவாடப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எழுவைதீவு வீரபத்திரர் ஆலயத்தில் வழிபாட்டிலிருந்த வீரபத்திரர் மற்றும் பத்திரகாளி அம்மன் ஆகிய இரு ஐம்பொன் எழுந்தருளி விக்கிரகங்களே இவ்வாறு திருடப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை பெறுமதி சுமார் 20 இலட்சம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக ஆலய நிர்வாகத்தினர் ஊர்காவற்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டைத் தொடர்ந்து காவற்துறையினர் நேரடியாக எழுவைதீவுக்குச் சென்று தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எழுவைதீவானது கடல் கடந்த பகுதி என்பதாலும், படகு மூலம் மட்டுமே போக்குவரத்து செய்ய முடியும் என்பதாலும், சிலைகள் தீவை விட்டு வெளியே கொண்டு செல்லப்பட்டிருக்க வாய்ப்புகள் குறைவு என நம்பப்படுகிறது.
“சந்தேகநபர்களை விரைவில் கைது செய்து, திருடப்பட்ட புனிதமான விக்கிரகங்களை மீட்க முடியும்” என ஊர்காவற்துறை காவற்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆலயங்களில் தொடரும் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் மக்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
#Eluvaitivu #Jaffna #TempleTheft #IdolTheft #SriLankaPolice #NewsAlert #யாழ்ப்பாணம் #எழுவைதீவு #சிலைதிருட்டு #வீரபத்திரர்ஆலயம்

