Home இலங்கை🎖️ பண்டத்தரிப்பில்   14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு!

🎖️ பண்டத்தரிப்பில்   14 ஆண்டுகளுக்குப் பின் காணி விடுவிப்பு!

by admin

சுமார் 14 வருடங்களாக இராணுவத்தினரின் பயன்பாட்டில் இருந்த பண்டத்தரிப்பு – காடாப்புலம் காணி, இன்று (ஜனவரி 28, 2026) உத்தியோகபூர்வமாக சிவில் நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளமை உள்ளூர் மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2012 ஆம் ஆண்டு முதல் குறித்த காணி மற்றும் அங்கிருந்த பிரதேச சபையின் கொல்களம் (Slaughterhouse) ஆகியவை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் இன்று புதன்கிழமை (28), இராணுவத்தினர் உத்தியோகபூர்வமாக அக்காணியை சண்டிலிப்பாய் பிரதேச செயலரிடம் ஒப்படைத்தனர். அங்கிருந்த இராணுவத்தினர் அராலி இராணுவ முகாமுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுழிபுரம் பகுதியிலிருந்த இராணுவ முகாமும் அகற்றப்பட்டு, அங்கிருந்தவர்கள் சங்கானைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், தற்போது பண்டத்தரிப்பு காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ். மாவட்டத்தில் இன்னும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் உயர் பாதுகாப்பு வலயங்களாகவும், விகாரை கட்டுமானங்களுக்காகவும் இராணுவத்தின் வசம் உள்ளன.

தையிட்டி விகாரையைச் சூழவுள்ள பெருமளவான தனியார் காணிகள் இன்னும் இராணுவ மற்றும் விகாரை நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அண்மையில் ஜனாதிபதியின் யாழ் பயணத்தின் போது, நாக விகாரை மற்றும் நாகதீப விகாரதிபதிகளே இந்தக் காணிகளை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

பலாலி விமான நிலையத்தைச் சூழவுள்ள வலி. வடக்கு பிரதேசம் இன்னும் பெருமளவில் விடுவிக்கப்படாமல் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் இடம்பெயர்ந்த முகாம்களிலும் உறவினர் வீடுகளிலும் வசித்து வருகின்றனர்.

யாழ்ப்பாணத்தின் பல கிராமப்புறங்களில் வீடுகள் மற்றும் பொதுக் கட்டிடங்களை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள சிறிய இராணுவ முகாம்களை அகற்றுமாறும் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.

விடுவிக்கப்பட்ட நிலங்களில் அந்தந்த பிரதேச சபைகள் மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக பொதுச் சந்தைகளை நவீனப்படுத்துதல், வீதிகளைப் புனரமைத்தல் மற்றும் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் சிறு தொழில்துறை மையங்களை அமைத்தல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Tag Words: #JaffnaNews #Pandatharippu #LandRelease #Sandalipay #CivilAdministration #JaffnaArmy #PostWarJaffna #NorthernProvince #SriLankaNews #LKA

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More