முன்னாள் ஆர்சனல் (Arsenal) வீரரும், தற்போதைய வில்லாரியல் (Villarreal) மத்தியகள வீரருமான தோமஸ் பார்ட்டி (Thomas Partey) மீது மேலும் இரண்டு பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. நேற்று (பிப்ரவரி 12, 2026, வியாழக்கிழமை) பிரித்தானிய அரச வழக்கறிஞர் அலுவலகம் (CPS) இந்த மேலதிக குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தியது.
2020 ஆம் ஆண்டு நான்காவது பெண் ஒருவருக்கு எதிராக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக 2 பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பான புகாரை அந்தப் பெண் ஓகஸ்ட் 2025-இல் வழங்கியிருந்தார்.
ஏற்கனவே 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் மூன்று பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் 5 பாலியல் குற்றச்சாட்டுகள் மற்றும் 1 பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு என மொத்தம் 8 குற்றச்சாட்டுகளை அவர் தற்போது எதிர்கொண்டுள்ளார்.
புதிய குற்றச்சாட்டுகள் தொடர்பான முதற்கட்ட விசாரணை வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் எதிா்வரும் மார்ச் 13ம் திகதி நடைபெறும். ஏற்கனவே உள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான முழுமையான வழக்கு விசாரணை (Trial) நவம்பர் 2ம் திகதி ஆரம்பமாகும்.
கடந்த 2025 ஜூன் மாதம் ஆர்சனல் அணியுடனான ஒப்பந்தம் முடிவடைந்த சில நாட்களிலேயே அவர் மீது முதல்முறை உத்தியோகபூர்வமாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. தற்போது ஸ்பெயினின் வில்லாரியல் அணிக்காக விளையாடி வரும் பார்ட்டி, கடும் பிணை நிபந்தனைகளின் கீழேயே வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார்.
இதேவேளை தோமஸ் பார்ட்டி தன் மீது சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுத்துள்ளதுடன், விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பதாகத் தெரிவித்துள்ளார்.
தோ மஸ் பார்ட்டி தற்போது ஸ்பெயினின் வில்லாரியல் அணிக்காக விளையாடி வருகின்ற நிலையில் புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட பின்னரும், வில்லாரியல் அணி அவருக்குத் தடை எதையும் விதிக்கவில்லை. அவர் தொடர்ந்து லலிகா (La Liga) மற்றும் ஏனைய போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்.
“நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை ஒருவர் குற்றமற்றவர் (Presumption of Innocence)” என்ற சட்டக் கோட்பாட்டை மதிப்பதாக வில்லாரியல் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பார்ட்டி தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுப்பதால், அவருக்கு ஆதரவாக அணி நிற்கிறது.
அதேவேளை, இவரை அணியில் சேர்த்தமைக்கு வில்லாரியல் ரசிகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவுகிறது. அணியின் நற்பெயருக்கு இது பாதிப்பை ஏற்படுத்துவதாக அவர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இதேவேளை கானா தேசிய அணியின் முக்கிய வீரராகத் திகழும் தோமஸ் பார்ட்டி, சர்வதேசப் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாடி வருகிறார். 2026 உலகக்கோப்பை தகுதிகாண் போட்டிகளில் (World Cup Qualifiers) கானா அணிக்காக அவர் அண்மையிலும் விளையாடியுள்ளார்.
லண்டன் நீதிமன்றம் அவருக்கு வழங்கியுள்ள பிணை நிபந்தனைகளின்படி, அவர் சர்வதேசப் போட்டிகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறார். ஆனால், ஒவ்வொரு முறை பயணிக்க முன்னரும் காவல்துறையினருக்கு 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
2026 ஜூன் மாதம் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பைப் போட்டியில், கானா அணி இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது. அந்தத் தொடரில் விளையாட இவருக்குத் தற்போதுவரை சட்டப்படி அனுமதி உள்ளது.
Tag Words: #ThomasPartey #FootballNews #LegalBattle #Villarreal #Arsenal #Justice #RapeCharges #LKA #SportsNews2026

