அமெரிக்க நீதித் திணைக்களம் அண்மையில் வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள், 2019 ஆம் ஆண்டு மர்மமான முறையில் சிறையில் உயிரிழந்த ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான விசாரணையில் அதிர்ச்சிகரமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன. எப்ஸ்டீன் உயிருடன் இருந்தபோது அவரைக் கடைசியாகப் பார்த்ததாக நம்பப்படும் சிறைக்காவலர் தோவா நோயல், எப்ஸ்டீனின் மரணத்திற்கு முந்தைய ஓராண்டு காலத்தில் தொடர்ச்சியாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் பணப்பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
குறிப்பாக, எப்ஸ்டீன் தனது சிறை அறையில் அசைவற்ற நிலையில் கண்டெடுக்கப்படுவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, ஜூலை 30 ஆம் திகதி தோவா நோயல் தனது வங்கிக் கணக்கில் $5,000 (£3,729) ரொக்கப் பணத்தை வைப்பு செய்துள்ளார். 2019 ஓகஸ்ட் 10 ஆம் திகதி நியூயார்க்கில் உள்ள மெற்றோபொலிட்டன் சிறைச்சாலையில் நிகழ்ந்த எப்ஸ்டீனின் மரணம் அதிகாரப்பூர்வமாகத் தற்கொலை என்று அறிவிக்கப்பட்ட போதிலும், தற்போது வெளிவந்துள்ள இந்த நிதித் தரவுகள் மற்றும் ஏற்கனவே நிலவிவரும் பாதுகாப்பு மீறல் புகார்கள் காரணமாக இச்சம்பவத்தில் சதித்திட்டம் இருந்திருக்குமா என்ற சந்தேகம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
சம்பவம் நடந்த இரவு தோவா நோயல் மற்றும் மற்றொரு காவலாளி எப்ஸ்டீனைக் கண்காணிக்கத் தவறியதுடன், போலி ஆவணங்களைத் தயாரித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டார். எனினும், பின்னர் அவர்களுடனான வழக்கு ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் கைவிடப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள இந்த நிதித் தகவல்கள், எப்ஸ்டீனின் மரணத்தில் ஏதேனும் சதித்திட்டம் இருந்திருக்குமா என்ற கேள்வியை மீண்டும் எழுப்பியுள்ளது. மேலும் எப்ஸ்டீன் தங்கியிருந்த சிறை அறையின் வாசலில் இருந்த இரண்டு கண்காணிப்பு கமராக்களும் அவர் இறந்த அன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாகச் செயல்படவில்லை என்பது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது
எப்ஸ்டீன் பல உலகத் தலைவர்கள் மற்றும் கோடீஸ்வரர்களுடன் (எ.கா: பில் கிளிண்டன், இளவரசர் ஆண்ட்ரூ, டொனால்ட் ட்ரம்ப்) நெருங்கிய தொடர்பில் இருந்தார். எப்ஸ்டீன் உயிருடன் இருந்தால் இவர்களது இரகசியங்கள் அம்பலமாகும் என்பதால், செல்வாக்கு மிக்க நபர்களால் அவர் சிறையிலேயே மௌனமாக்கப்பட்டார் என்பதே இணையத்தில் பரவலாகப் பேசப்படும் தத்துவங்களின் அடிப்படையாகும்.
#JeffreyEpstein #PrisonGuard #DOJDocuments #SuspiciousCash #JusticeUpdate

