274
யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிதி மோசடி வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட 06 சந்தேகநபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும், நீண்டகாலமாக வழக்குத் தவணைகளுக்கு முன்னிலையாகாது தலைமறைவாகியுள்ள நிலையில், அவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மோசடி குற்றச்சாட்டுகளுக்காகப் பிணையில் இருந்த குறித்த நபர்கள், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியதால் அவர்களுக்கு எதிராக ஏற்கெனவே திறந்த பிடியானைகள் (Open Warrants) பிறப்பிக்கப்பட்டிருந்தன.
சந்தேகநபர்கள் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், காவற்துறையினரால் அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் முற்படுத்த முடியாத சூழல் காணப்பட்டது.
இந்த நிலையில் சந்தேகநபர்கள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29ஆம் திகதிக்கு முன்னர் நேரடியாக நீதிமன்றத்திலோ, அல்லது யாழ்ப்பாண காவல் நிலையத்திலோ முன்னிலையாக வேண்டும்.
தவறும் பட்சத்தில், அவர்களின் பெயரிலுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை (ஆதனங்களை) முழுமையாகக் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நீதவான் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் சந்தேகநபர்களின் வசிப்பிடங்கள் மற்றும் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பொது இடங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அத்துடன், காவற்துறையினரால் ஒலிபெருக்கிகள் ஊடாகவும் பகிரங்க அறிவித்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
பொதுமக்கள் நிதி கொடுக்கல் வாங்கல்களில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Spread the love

