164
இஸ்ரேல் மற்றும் ஈரான்–லெபனான் இடையிலான சமீபத்திய போர்மூலம் இதுவரை 3,138 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என இஸ்ரேலின் சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
சுமார் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் தாக்குதல்களின் பின்னர், காயமடைந்தவர்கள் இஸ்ரேலின் பல்வேறு வைத்தியசாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அமைச்சகத் தகவலின்படி, தற்போது 81 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில்
ஒருவர் மிக ஆபத்தான நிலையில்,
9 பேர் கடுமையான காயங்களுடன்,
8 பேர் நடுத்தர காயங்களுடன்,
57 பேர் சிறிய காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின் விளைவாக ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக ஏவுகணைகள் எத்தனை தரையிறங்கின, அவை எந்த இடங்களை தாக்கின என்ற தகவல்களில் இஸ்ரேல் அதிகாரிகள் கடுமையான தணிக்கையை தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், லெபனானைத் தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பு மார்ச் 2ஆம் திகதி முதல் இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை தாக்கத் தொடங்கியது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானுக்கு மேற்கொண்ட தாக்குதல்களில், டெஹ்ரானில் இருந்த அந்நாட்டு உச்சத் தலைவர் அலி காமனேய் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்கும் பதிலளிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், 2024 நவம்பர் மாதத்தில் எட்டப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் இருந்தபோதிலும், மார்ச் 2ஆம் திகதி அதே நாளில் இஸ்ரேல் பேரூத்தின் தெற்கு புறநகர் பகுதிகளிலும், தெற்கு மற்றும் கிழக்கு லெபனானிலும் வான்வழித் தாக்குதல்களை விரிவுபடுத்தியது.
அதனைத் தொடர்ந்து மார்ச் 3ஆம் திகதி, தெற்கு லெபனானுக்குள் வரையறுக்கப்பட்ட தரைப்படை நடவடிக்கையையும் இஸ்ரேல் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நேரத்தில் பெப்ரவரி 28ஆம் திகதி முதல் அமெரிக்காவுடன் இணைந்து ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையும் தொடர்கிறது.
லெபனான் அதிகாரிகள் வெளியிட்ட தகவலின்படி, இஸ்ரேல் விரிவுபடுத்திய தாக்குதல்களின் விளைவாக இதுவரை 626 பேர் உயிரிழந்ததுடன், 2,009 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 831,822 பேர் தங்கள் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

