Home இலங்கைவடமாகாணப் பாடசாலைகளில் பைபிள் விநியோகம் – ஆளுநர் நடவடிக்கை

வடமாகாணப் பாடசாலைகளில் பைபிள் விநியோகம் – ஆளுநர் நடவடிக்கை

by admin

வடக்கு மாகாணப் பாடசாலைகளில் மாணவர்களுக்கு பைபிள் விநியோகிப்பது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகளைத் தொடர்ந்து, ஆளுநர் நா. வேதநாயகன் முக்கியமான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். அது குறித்து ஆளுநர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

பாடசாலைகளுக்குள் வெளிநபர்கள் அல்லது அமைப்புகள் நேரடியாகச் சென்று மத நூல்கள் விநியோகிப்பது முற்றிலும் தடை செய்யப்படுகிறது. பைபிள் வழங்க விரும்பும் அமைப்புகள், அதை நேரடியாக மாணவர்களுக்கு வழங்காமல் மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் ஒப்படைக்க வேண்டும். பின்னர்: அந்த நூல்கள் கிறிஸ்தவ பாடம் கற்கும் மாணவர்களுக்கு மட்டும்அதிகாரிகளின் கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் வை.ஜெயசந்திரனுக்கு ஆளுநர் தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

வெளிநாட்டுத் தொண்டு நிறுவனமொன்றால் பாடசாலை மாணவர்களுக்கு பைபிள் வழங்குவது தொடர்பில் மாகாணக் கல்வித் திணைக்களத்தால் ஆரம்பத்தில் வழங்கப்பட்ட அனுமதி கடிதம் தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் சுட்டிக்காட்டப்பட்டது.
குறித்த அமைப்பு தமக்குரிய கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்கே அனுமதி கோரியிருந்த போதிலும், கல்வித் திணைக்களத்தின் ஆரம்பக் கடிதத்தின் வாசகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் விநியோகிக்கப்படவுள்ளதாக புரிந்துகொள்ளப்பட்டு சர்ச்சைகள் எழுந்தன.
இதனையடுத்து, குறித்த விநியோகமானது ரோமன் கத்தோலிக்கர் அல்லாத கிறிஸ்தவ மாணவர்களுக்கு மாத்திரமே என மாகாண மேலதிகக் கல்விப் பணிப்பாளரால் திருத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் பின்னர் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், இவ்விடயம் தொடர்பிலான சர்ச்சைகள் தொடரும் நிலையில், பாடசாலைக் கட்டமைப்புக்குள் மத நல்லிணக்கத்தைப் பேணுவதும், தேவையற்ற குழப்பங்களைத் தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இதற்கான உரிய ஒழுங்குவிதிகளை நடைமுறைப்படுத்துமாறு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதற்கமைவாக, பாடசாலைகளுக்குள் வெளிநபர்களோ அல்லது அமைப்புகளோ நேரடியாகச் சென்று மத நூல்களை விநியோகிக்கும் நடைமுறை முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும் என ஆளுநர் பணித்துள்ளார்.  மேற்படி பைபிள்களை விநியோகிக்க விரும்பும் குறித்த நிறுவனம், அவற்றை வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்திடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் நூல்களை, கிறிஸ்தவ பாடத்துக்குப் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், அந்த நூல் அவசியமான மற்றும் அப் பாடத்தைக் கற்கும் மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆளுநர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த முறையான நிர்வாக நடைமுறையின் ஊடாக, பாடசாலைகளில் சகல மத மாணவர்களிடையேயும் நல்லிணக்கம் பாதுகாக்கப்படுவதுடன், தேவையற்ற முரண்பாடுகள் தவிர்க்கப்படும் என நம்புவதாக ஆளுநர் குறிப்பிட்டுள்ளார் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 மொத்தத்தில், இந்த நடவடிக்கை பள்ளி சூழலில் மத சார்ந்த விஷயங்கள் கட்டுப்பாட்டுடனும் சமநிலையுடனும் நடத்தப்பட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

#NorthernGovernor #EducationPolicy #ReligiousHarmony #JaffnaSchools #OfficialStatement

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More