ஈரான் மீதான ‘ஒபரேஷன் எபிக் ஃபியூரி’ (Operation Epic Fury) இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அமெரிக்க போர் விமானங்களுக்குத் தனது வான்பரப்பைப் பயன்படுத்த ஸ்பெயின் அரசாங்கம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. சர்வதேச சட்டங்களுக்குப் புறம்பான இந்த சட்டவிரோதப் போரில் தாங்கள் பங்கெடுக்கப் போவதில்லை என்பதை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sanchez) திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் போன்ற மூன்றாம் நாடுகளிலிருந்து புறப்படும் அமெரிக்க போர் விமானங்கள் ஸ்பெயின் வான்பரப்பிற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், பிரித்தானியாவின் ஆர்.ஏ.எப் ஃபேர்ஃபோர்ட் (RAF Fairford) தளத்திலிருந்து ஈரானை நோக்கிச் செல்லும் பி-52 (B-52) மற்றும் பி-01 (B-01) ரக குண்டுவீச்சு விமானங்கள் தமது பயணப் பாதையை மாற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
காடிஸ் (Cadiz) மற்றும் செவில்லே (Seville) மாகாணங்களில் உள்ள ரோட்டா (Rota) மற்றும் மொரோன் (Morón) வான்படைத் தளங்களை அமெரிக்கப் போர் விமானங்கள் அல்லது எரிபொருள் நிரப்பும் விமானங்கள் பயன்படுத்துவதற்கும் ஸ்பெயின் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
ஸ்பெயினின் இந்த முடிவால், அமெரிக்க விமானங்கள் போர்த்துகல்லின் அசோரஸில் (Azores) உள்ள லாஜஸ் (Lajes) வான்படைத் தளத்தில் எரிபொருள் நிரப்ப வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளன. இது அமெரிக்காவின் இராணுவத் திட்டமிடலில் பெரும் தாமதத்தையும் சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
அவசர கால சூழ்நிலைகளில் மற்றும் மனிதாபிமான அடிப்படையிலான தேவைகளுக்கு மட்டுமே ஸ்பெயின் வான்பரப்பைப் பயன்படுத்த அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, ரோட்டா கடற்படைத் தளத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு இந்தத் தடை விதிக்கப்படவில்லை. இஸ்ரேலைப் பாதுகாக்கும் நோக்கில் USS Oscar Austin, USS Roosevelt மற்றும் USS Burkeley ஆகிய போர்க்கப்பல்கள் கிழக்கு மத்திய தரைக்கடல் பகுதியில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்க நிர்வாகம் எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஸ்பெயினின் இந்த நடுநிலையான வெளியுறவுக் கொள்கை பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
#Spain #IranConflict #OperationEpic #USMilitary #AirspaceBan #InternationalNews #PedroSanchez #BreakingNews #MiddleEastCrisis #WorldPolitics

