Home இலங்கைவடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன

வடக்கில் சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையில் உள்ளன

by admin

வருமானம் குறைந்த உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது வருமானங்களை அதிகரித்துக் கொள்வதற்கு, வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் பெரும் உதவியாக அமையும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
பொது நிருவாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றங்களின் வருமானத்தை ஈட்டும் செயற்றிட்டங்களுக்கான வினைத்திறன் அடிப்படையிலான மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான கலந்துரையாடலில் பங்கேற்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொந்த வருமானத்திலேயே பணியாளர்களின் சம்பளத்தை வழங்க வேண்டியுள்ளமையால், அவற்றுக்கான வருமானங்களை அதிகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. வடக்கு மாகாணத்திலுள்ள சில உள்ளூராட்சி மன்றங்கள் மிகவும் பின்தங்கிய வருமான நிலையிலேயே காணப்படுகின்றன. எனவே, இந்த மூலதன மானிய நிகழ்ச்சித்திட்டம் அவற்றினை நிச்சயம் வலுவூட்டும். இந்தத் திட்டத்தின் ஊடாக உள்ளூராட்சி மன்றங்கள் தங்களது சொத்துக்களை அதிகரித்து வருமானத்தைக் கூட்டிக்கொள்ள முடியும்

வடக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், அது தொடர்பான விடயங்களில் உள்ளூராட்சி மன்றங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளன. இந்த நிதியைப் பயன்படுத்தி சுற்றுலாத்துறை சார்ந்த வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முன்மொழிந்துள்ளமையின் ஊடாக அவற்றின் வருமானங்கள் நிச்சயம் அதிகரிக்கும்

எதிர்வரும் செப்ரெம்பர் மாதத்துக்கு முன்னர் இந்தச் செயற்றிட்டங்களை நிறைவுறுத்துவதற்குத் எமது முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். இந்தத் திட்டத்துக்கு வடக்கு மாகாணத்தில் உள்ள 22 பிரதேச சபைகளால் 54 திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்த நிலையில், ஒவ்வொரு பிரதேச சபைக்கு ஒவ்வொரு திட்டம் என்ற அடிப்படையில் 22 திட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

பிரதி அமைச்சர் ருவன் செனரத் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் அமைச்சின் மேலதிக செயலாளர் தலைமையிலான குழுவினர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர் (திட்டமிடல்), உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர், மாவட்டங்களின் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

#Northern Province Governor #Vethanayahan #Performance-Based #Capital Grant #LocalAuthorities #Revenue #Tourism #Development #PradeshiyaSabhas

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More