கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் (TMVP) கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 2006 ஆம் ஆண்டு கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் சி. ரவீந்திரநாத் கொழும்பில் வைத்து கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிள்ளையான் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கடத்தல் மற்றும் காணாமலாக்கல் சம்பவம் தொடர்பில் நேற்று (2026 ஏப்ரல் 02) மீண்டும் கல்கிசை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவரை, சட்டமா அதிபரின் மேலதிக ஆலோசனைகள் கிடைக்கும் வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
பிள்ளையான் ஏற்கனவே 2015 முதல் 2020 வரை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்குத் தொடர்பாக நீண்ட காலம் விளக்கமறியலில் இருந்தவர். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டிருந்தார். எனினும், 2019 ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தொடர்பான புதிய விசாரணைகள் மற்றும் பழைய கடத்தல் வழக்குகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் அண்மையில் மீண்டும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#PillayanRemanded #SivanesathuraiChandrakanthan #EasternUniversityVC #CIDInvestigation #SriLankaPolitics

