127
பனாமா நகரில் உள்ள புகழ்பெற்ற ‘அமெரிக்காஸ் பாலம்’ (Bridge of the Americas) அருகே நிகழ்ந்த பயங்கர எரிபொருள் தாங்கி லாரி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்து இருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்.
பனாமா ஒயில் டெர்மினல்ஸ் (Panama Oil Terminals S.A.) நிறுவனத்திற்கு அருகிலுள்ள லா போகா (La Boca) பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி லொரி ஒன்றில் எதிர்பாராதவிதமாக தீப்பிடித்தது. இந்தத் தீ மளமளவென அருகில் இருந்த மற்ற லொரிகளுக்கும் பரவியதால், அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. அடுத்தடுத்து நிகழ்ந்த வெடிப்புச் சம்பவங்களால் அந்த இடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
இந்தத் துயர சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இருவர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகினர். தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் இருவருக்கு கரும்புகை காரணமாக சுவாசக் கோளாறு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பாதுகாப்பு கருதி ‘அமெரிக்காஸ் பாலம்’ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. வெடிப்புச் சம்பவத்தால் பாலத்தின் கட்டுமான அமைப்பிற்கு ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்பதை வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வு முடிவடைந்த பின்னரே போக்குவரத்து மீண்டும் அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து பனாமா கால்வாய் (Panama Canal) இயக்கத்தை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்று பனாமா கால்வாய் ஆணையம் (Panama Canal Authority) தெளிவுபடுத்தியுள்ளது. விபத்து நடந்த பகுதி கால்வாய்க்கு அருகில் இருந்தாலும், கப்பல் போக்குவரத்து வழக்கம் போல் சீராக நடைபெற்று வருகிறது.
Spread the love

