171
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தில் 110 கிலோகிராமுக்கும் அதிக எடையுள்ள ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ ரக போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட 22 பிக்குமாரையும், எதிர்வரும் மே மாதம் 02 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி ஒரு விளம்பரதாரர் வழங்கிய விமான பயணச்சீட்டுகளைப் பயன்படுத்தி இவர்கள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். அங்கு சாதாரண உடைகளை அணிந்து இவர்கள் நடமாடிய புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் அவர்களது கைபேசிகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன. அங்கிருந்து இலங்கை திரும்பிய போதே, இவர்களது பயணப் பைகளில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 1.1 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுள்ள போதைப்பொருட்களை காவற்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினர் மீட்டனர்.
முக்கிய தகவல்கள்:
• ஒவ்வொரு பிக்குவும் தலா 5 கிலோகிராமுக்கும் அதிக போதைப்பொருளை எடுத்து வந்துள்ளனர்.
• கட்டுநாயக்க வானூர்தி நிலைய வரலாற்றில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் இதுவாகும்.
• இந்தக் குழுவை வழிநடத்திய பிரதான சந்தேக நபரான மற்றுமொரு பிக்கு, கம்பஹா – மீகஹமுல்ல பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
• கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், பலர் உயர்கல்வி பயின்று வரும் இளம் பிக்குகள் என்றும் தெரியவந்துள்ளது.
மகா நாயக்க தேரர்களின் அதிரடி அறிவிப்பு: இந்தச் சம்பவம் தொடர்பில் மல்வத்து, அஸ்கிரி, அமரபுர மற்றும் ராமஞ்ஞ ஆகிய நான்கு மகா பீடங்களின் மகா நாயக்க தேரர்களும் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். சமய விதிகளுக்குப் புறம்பாக இவ்வாறான சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் பிக்குகள் தொடர்பில் கண்டறிந்து, அவர்களைத் துறவறத்திலிருந்து (சாசனத்திலிருந்து) நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் அறிவித்துள்ளனர். மேலும், இளம் பிக்குகளைத் தூண்டும் போதைப்பொருள் மாஃபியாக்களுக்கு எதிராகத் தராதரம் பார்க்காமல் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் காவியுடை அணிந்து வேடமிட்டவர்களே போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக கூற வேண்டும் என்கிறார் ஞானசார தேரர்.
புத்தசாசனத்தை அவமதிக்கவெ 22 பிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் அவர்கள் அப்பாவிகள் என்கிறார் சீல ரட்ணதேரர்.
அரசாங்கத்தின் திட்டமிட்ட சதியே பிக்குகள் கைது என்கிறார் பலாங்கொடை கஸபவ தேரர்.
ஆனால் கைதான 22 பிக்குகளையும் துறவறத்தில் இருந்து நீக்க நடவடிக்கை என மஹாநாயக்க தேரர்கள் அறிவித்திரப்பது வேடதாரிகள் அல்ல அவர்கள் துறவறத்தை நாடிய பிக்குகள் என்பதனை உறுதிப்படுத்தகிறது.
________________________________________
Spread the love

