யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட உணவகம் ஒன்றிற்கு, பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் நேற்று (2026 மே 07, வியாழக்கிழமை) ஒரு இலட்சம் ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகர் (PHI) ப. தினேஸினால் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையைத் தொடர்ந்தே இந்தத் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்தத்த உணவகத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது உணவு பொதியிடலுக்குத் தடைசெய்யப்பட்ட லஞ்சீட்களைப் பயன்படுத்தியமை, உரிய அனுமதி பெறாமலும், உணவு வளவுப் பதிவுச் சான்றிதழ் இல்லாமலும் உணவகத்தை நடத்தியமை, உணவு தயாரிப்பிற்குப் பயன்படுத்தப்படும் நீர் குடிப்பதற்குத் தகுதியானது என்பதை உறுதிப்படுத்தத் தவறியமை, சட்டவிரோத மற்றும் சுகாதாரமற்ற நடைமுறைகள் , ஊழியர்கள் தமது உடல்நலத் தகுதியை உறுதிப்படுத்தும் மருத்துவச் சான்றிதழ் இன்றி உணவைக் கையாண்டமை. தனிநபர் சுகாதாரம் பேணப்படாமை மற்றும் வெளிச் சூழல் மாசடைவதற்குக் காரணமான முறையில் உணவைத் தயாரித்தமை போன்ற சுகாதாரமற்ற நடைமுறைகள் கண்டறியப்பட்டன:
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாகப் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது உணவக உரிமையாளர் தன் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஏற்றுக்கொண்டார் இதனைத் தொடர்ந்து, உரிமையாளரை நீதவான் கடுமையாக எச்சரித்ததுடன், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் (அபராதம்) விதித்து உத்தரவிட்டார்.
பொதுமக்களின் சுகாதாரப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் முன்னெடுக்கும் இத்தகைய அதிரடிச் சோதனைகள் வரவேற்கத்தக்கவை. குறிப்பாக, நச்சுத்தன்மை வாய்ந்த லஞ்சீட்களின் பாவனை மற்றும் முறையான மருத்துவச் சான்றிதழ்கள் இன்மை போன்ற விடயங்கள் நுகர்வோரின் ஆரோக்கியத்திற்குப் பாரிய அச்சுறுத்தலாக அமைகின்றன. பருத்தித்துறை நீதிமன்றம் விதித்துள்ள இந்த ஒரு இலட்சம் ரூபா அபராதம், ஏனைய உணவக உரிமையாளர்களுக்கும் ஒரு பாடமாக அமையும். உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது வெறும் தண்டப்பணத்தோடு முடிந்துவிடாமல், மக்களின் உயிருடன் விளையாடும் செயலாகும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
#PointPedro #FoodSafety #HealthRaid #PHISriLanka #LunchSheetBan

