ஈழத்தமிழர் வரலாற்றின் கறுப்புப் பக்கமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 17-ஆம் ஆண்டு நினைவு வாரம் இன்று (2026 மே 11, திங்கட்கிழமை) உணர்வுபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதன் ஒரு அங்கமாக, வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் ஏற்பாட்டில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன. முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து, “முள்ளிவாய்க்கால் கஞ்சி” பரிமாறப்பட்டமை இந்நாளின் முக்கிய நிகழ்வாக அமைந்தது.
வலிகாமம் தெற்கு பிரதேச சபை வளாகத்திற்கு முன்பாகப் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றன. இறுதிப் போரில் உயிரிழந்த உறவுகளின் நினைவாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர், வலி. தெற்கு பிரதேச சபை தவிசாளர், சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தின் முக்கிய அடையாளமாக “முள்ளிவாய்க்கால் கஞ்சி” வழங்கும் அறப்பணி முன்னெடுக்கப்பட்டது. போரின் இறுதி நாட்களில் உணவு மற்றும் மருந்துத் தட்டுப்பாடு நிலவிய போது, மக்கள் உயிர்வாழ ஆதாரமாக இருந்த ஒரே உணவு இந்தக் கஞ்சி மட்டுமே.இது வெறும் உணவு மட்டுமல்ல, ஈழத்தமிழர்கள் சந்தித்த சொல்லொணாத் துயரங்கள் மற்றும் அவர்களின் மன உறுதியின் குறியீடாக இன்று உலகெங்கும் நினைவுகூரப்படுகிறது.

#Mullivaikkal #RemembranceWeek #ValiSouthPS #MullivaikkalKanji #JaffnaMemorial

